தேசிய அளவிலான வாலிபால் வீராங்கனை சாலியத் மாரடைப்பால் இன்று மரணமடைந்துள்ளார். கர்நாடக மாநிலம் பெல்தங்கடி தாலுக்காவில் உள்ள படங்கடி பொய்குடே பகுதியைச் சேர்ந்த சாலியத் தேசிய அளவிலான வாலிபால் வீராங்கனை ஆவார். 24 வயதான இவருக்கு கடந்த ஓராண்டுக்கு முன்புதான் திருமணம் நடைபெற்றுள்ளது. இவர் கடந்த ஒரு வருடமாக சிக்கமகளூரில் உள்ள கணவர் வீட்டில் வசித்து வந்துள்ளார்.
நேற்று அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து உடனடியாக அவர் மங்களூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். எனினும் சிகிச்சை பலனின்றி அவர் இன்று உயிரிழந்தார். சாலியத் தேசிய வாலிபால் போட்டியில் வெள்ளிப் பதக்கம், சீனியர் தேசிய தென் மண்டலப் போட்டியில் தங்கப் பதக்கம் மற்றும் ஜூனியர் தேசிய போட்டியில் மூன்றாம் இடம் பெற்று சாதனை படைத்துள்ளார். இளம் வீராங்கனை மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.