அமெரிக்கா நியூஜெர்சில் 183 ஏக்கர் பரப்பளவில், டெல்லியில் இருப்பதை போன்ற மிகப்பெரிய பிரமாண்டமான பாப்ஸ் சுவாமி நாராயண் அக்ஷர்தாம் கோவில் திறக்கப்பட்டு உள்ளது. அக்ஷர்தாம் என்றால் இறைவனின் புனிதமான இருப்பிடம் என பொருள்படும். கம்போடியாவின் அங்கோர்வாட் கோவிலின் பரப்பளவுக்கு அடுத்தப்படியாக உள்ளதால், இக்கோவில் உலகின் இரண்டாவது மிகப்பெரிய இந்து கோவில் என்ற பெருமையைப் பெற்றுள்ளது.
கடந்த 2011இல் துவங்கப்பட்ட இக்கோவிலின் கட்டுமானப் பணியானது, தற்போது வரை அமெரிக்கா முழுவதிலும் இருந்து 12,000-க்கும் மேற்பட்ட தன்னார்வலர்களால் தொண்டு வழங்கப்பட்டு கட்டப்பட்டுள்ளது. கட்டுமானத்தில் சுண்ணாம்பு, இளஞ்சிவப்பு மணற்கல், பளிங்கு மற்றும் கிரனைட் உள்ளிட்ட கற்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது.
இந்த கோவில் வளாகத்தில் 10,000 சாமி சிலைகள், ஒரு பெரிய கோவில் மற்றும் 12 துணைக்கோவில்கள் கட்டப்பட்டுள்ளன. மேலும் ஆயிரம் ஆண்டுகள் தாங்கும் வகையில் மிகப்பெரிய நீள்வட்ட குவிமாடம் அமைக்கப்பட்டுள்ளது. வரும் 18ஆம் தேதி இது பக்தர்களின் தரிசனத்திற்காக திறக்கப்படுவதாக கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.