ஜார்கண்ட் மாநிலத்தில் நடந்த ஒரு சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அங்குள்ள போரியா மாவட்டத்தில் உள்ள காட்டுப் பகுதியில் 9 துண்டுகளாக பெண்ணின் உடல் ஒன்று கண்டெடுக்கப்பட்டதுதான் இந்த பரபரப்புக்கு காரணம். சட்கி என்ற கிராமத்தில் உள்ள மலைப்பகுதியில் பெண்ணின் உடல் பாகங்களை பார்த்த மக்கள், போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர், அங்கு சென்று அந்த பெண்ணின் உடைகள், பைக் சாவியையும் கைப்பற்றினர். அதைக்கொண்டு அடையாளம் காணப்பட்டதில் படுகொலை செய்யப்பட்ட பெண் அப்பகுதியைச் சேர்ந்த அங்கன்வாடி பணியாளரான மாலோதி சோரன் என்பது தெரியவந்தது. பின்னர் விசாரணையில் பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் அம்பலமானது.
உயிரிழந்த பெண்ணின் சகோதரி ராணி சோரேன் கொடுத்த வாக்குமூலத்தின்படி, மாலோதிக்கு தேலு என்ற நபருடன் பல ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு இரு ஆண், ஒரு பெண் என 3 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், சில மாத காலமாகவே மாலோதியின் கணவர் தேலுவுக்கும் மற்றொரு பெண்ணுக்கும் கள்ளத்தொடர்பு இருந்து வந்துள்ளது. இது மாலோதியின் கவனத்திற்கு வரவே அதை அவர் கண்டித்துள்ளார். இது தொடர்பாக தம்பதி இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. கணவர் தேலு மனைவியை தொடர்ச்சியாக கொடுமைப்படுத்தி வந்துள்ளார்.
கடந்த மாதம் வீட்டில் இருந்து மாலோதி தனது தாய் வீட்டிற்கு சென்றபோது, தேலு மற்றொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இந்த தகவல் மாலோதிக்கு தெரியவரவே, கடந்த ஏப்ரல் 27ஆம் தேதி தனது கணவர் வீட்டிற்கு நியாயம் கேட்க சென்றுள்ளார். அப்போது மாலோதி மாயமான நிலையில், பெண்ணின் வீட்டார் காவல்துறையிடம் புகார் அளித்துள்ளனர். பின்னர் தான், கணவரால் மாலோதி படுகொலை செய்யப்பட்ட அதிர்ச்சி உண்மை அம்பலமானது. தொடர்ந்து கணவர் தேலுவை கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்தச் சம்பவம் அங்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.