கடலூர் மாவட்ட பகுதியில் உள்ள வேப்பூரை அடுத்த மலையனூரில் வசிப்பவர் வேல்முருகன். இவரது தோட்டத்தில் இருக்கும் விவசாய கிணற்றில் மூன்று பெண்களின் உடல்கள் மிதப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்து, உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனை தொடர்ந்து நடத்திய முதற்கட்ட விசாரணையில், உயிரிழந்தவர்கள் மிஸ்பா சாந்தி, அவரது 8 வயது மகள் மற்றும் தாய் கல்யாணி என்பது தெரியவந்தது.
சிவகுருநாதன் என்பவர், மங்களூர் பகுதியில் வேலை பார்த்தபோது மிஸ்பா சாந்தியுடன் திருமணம் செய்துகொள்ளாமல் குடும்பம் நடத்தி வந்துள்ளார். இது பற்றி மனைவி சுமதிக்கு தெரிய வரவே கடந்த 2016ஆம் ஆண்டு அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
சென்ற மாதம் 27ஆம் மிஸ்பா சாந்தி,தனது மகள் மற்றும் தாயுடன் மலையனூருக்கு வந்த நிலையில் இங்கேயே தனியாக வீடு பார்த்து தரும்படி கேட்டு கொண்டுள்ளார்.இதனையடுத்து சிவகுருநாதனும் வீடு ஒன்றை ஏற்பாடு செய்து கொடுத்து தங்க வைத்துள்ளார்.
நேற்று இரவு மிஸ்பா சாந்தியின் வீட்டிற்கு சிவகுருநாதன் உணவு வாங்கி சென்ற போது, அங்கு யாரும் இல்லை என்பதால் தேடிப் பார்த்துவிட்டு தனது வீட்டிற்கு மீண்டும் சென்றுள்ளார்.இந்த நிலையில் மறுநாள் காலையில் மூவருமே கிணற்றில் சடலமாக கிடந்துள்ளனர். இது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.