முக.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு 2021ஆம் ஆண்டு ஆட்சிப் பொறுப்பேற்றது. முக.ஸ்டாலின் முதல்வராக பதவியேற்றப் பிறகு அவரது அமைச்சரவை 3-வது முறையாக அமைச்சரவை மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஆட்சிக்கு வந்த பிறகு 2022 மார்ச் மாதம் நடைபெற்ற அமைச்சரவை மாற்றத்தில் போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்த ராஜகண்ணப்பன் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறைக்கு மாற்றப்பட்டார். பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக இருந்த சிவசங்கர், போக்குவரத்து துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார். 2022ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் மீண்டும் ஒருமுறை தமிழக அமைச்சரவையில் மாற்றம் நடந்தது. இம்முறை பல அமைச்சர்களின் துறைகள் மாற்றப்பட்டன. கூடுதலாக, உதயநிதி ஸ்டாலின் புதிய அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார்.
அவருடன் சேர்த்து தமிழ்நாடு அமைச்சரவை எண்ணிக்கை 35ஆக உயர்ந்தது. நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜனுக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டது. இந்நிலையில், அமைச்சரவையில் மாற்றம் இருக்கும் என கடந்த சில நாட்களாக தகவல்கள் வெளியாகி வந்த நிலையில், நேற்று முன்தினம் ஆளுநர் மாளிகை வெளியிட்ட செய்திக்குறிப்பில், முதலமைச்சர் முக.ஸ்டாலின் பரிந்துரையின் பேரில், பால்வளத்துறை அமைச்சராக இருந்த சா.மு. நாசர் நீக்கப்பட்டு, மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினர் டி.ஆர்.பி. ராஜா புதிய அமைச்சராக நியமிக்கப்படுகிறார் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், இன்று காலையில் டி.ஆர்.பி.ராஜா அமைச்சராக பதவியேற்றார். பின்னர், அமைச்சர்கள் அனைவரும் இணைந்து குழு புகைப்படம் எடுத்துக்கொண்டனர். அதனைத் தொடர்ந்து, அமைச்சர் ஒதுக்கப்பட்ட துறைகள் குறித்து அறிவிப்பு வெளியானது. அதன்படி, புதிதாக பதவியேற்ற டி.ஆர்.பி.ராஜாவுக்கு தொழிற்துறை ஒதுக்கப்பட்டுள்ளது. அதேபோல், மனோ தங்கராஜ் வசம் இருந்த தகவல் தொழில்நுட்பத்துறை நிதியமைச்சராக இருந்த பழனிவேல் தியாகராஜனிடம் வழங்கப்பட்டு உள்ளது. பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் அமைச்சராக இருந்த நிதித்துறை, தொழிற்துறை மற்றும் தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் தங்கம் தென்னரசுவிடம் ஒப்படைக்கப்பட்டு இருக்கிறது. தங்கம் தென்னரசு வகித்த தொழிற்துறை இலாக்கா, புதிதாக அமைச்சரவையில் இணைந்து இருக்கும் டிஆர்பி ராஜாவிடமும், தமிழ் வளர்ச்சித்துறை இலாகா, செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதனுக்கு கூடுதலாக வழங்கப்பட்டது.