உத்தரபிரதேசத்தின் பரேலி மாவட்டத்தில், தந்தையிடம் இருந்த 4 மாத ஆண் குழந்தையை குரங்குகள் தூக்கி வீசியதால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஷாஹி காவல் நிலையத்திற்கு உட்பட்ட பரேலியின் துங்கா பகுதியில் நேற்று முன் தினம் இந்த சம்பவம் நடந்துள்ளது. மூன்று மாடிகளைக் கொண்ட வீட்டின் கூரையில் குழந்தையைக் கையில் தூக்கிக் கொண்டு தந்தை நடந்து சென்று கொண்டிருந்ததாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். திடீரென கூரை மீது ஏறி வந்த குரங்குகள் தந்தையை தாக்க தொடங்கி உள்ளன. ஆனால் குடும்பத்தின் மற்ற உறுப்பினர்கள் தங்களைக் காப்பாற்ற வருவதற்குள், குரங்குகள் ஆண் குழந்தையை பிடுங்கி மாடியில் இருந்து தூக்கி எறிந்தன. இதில் குழந்தை சம்பவ இடத்திலேயே இறந்தது.
குரங்குகள் வீட்டின் மேற்கூரையை அடைந்தபோது மற்ற குடும்ப உறுப்பினர்களையும் தாக்கியதாக தெரிகிறது.. மேலும் குழந்தையின் தந்தையை குரங்குகள் கடித்து விட்டதாக கூறப்படுகிறது.. பரேலி தலைமை வனப் பாதுகாவலர் லலித் வர்மா, இந்த சம்பவம் குறித்து புகார் அளிக்கப்பட்டுள்ளதாகவும், விசாரணை நடத்த வனத்துறை குழு அனுப்பப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது…