விழுப்புரம் மாவட்டம் அருகே மேல்பாதி கிராமத்தில் அமைந்துள்ளது திரவுபதி அம்மன் கோயில். இந்த கோயிலுக்குள் சென்று வழிபடுவது தொடர்பாக இரு சமூக மக்களிடையே பல ஆண்டுகளாக பிரச்சனை நிலவி வருகிறது. இந்த கோயிலில் கடந்த ஏப்ரல் மாதம் தீ மிதி திருவிழா நடைபெற்றது. அப்போது வழிபட கோயிலுக்குள் சென்ற பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த சிலர் மீது, மற்றொரு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த விவகாரம் பெரும் பிரச்சனையாக வெடித்தது. தாக்குதலில் பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த 10-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.
இந்த சம்பவத்தில் புகார் அளித்து ஒரு மாதமாகியும் தாக்குதல் நடத்தியவர்கள் மீது போலீசார் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த மேல்பாதி கிராமத்தைச் சேர்ந்த பட்டியலின மக்கள், நேற்று முன்தினம் திமுக அமைச்சர் பொன்முடியை முற்றுகையிட்டு கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது பட்டியலின மக்களுக்கு ஆதரவாகவும், மற்றொரு சமூக மக்களுக்கு எதிராகவும் திமுக அமைச்சர் பொன்முடி பேசியதாக கூறப்படுகிறது. இதையடுத்து, தங்கள் சமூக மக்களை இழிவுப்படுத்தி ஒரு சமூக மக்களுக்கு மட்டும் ஆதரவாக செயல்பட்டு வருவதாக கூறி அமைச்சர் பொன்முடியைக் கண்டித்து மேல்பாதி கிராமத்தில் உள்ள சர்ச்சைக்குரிய திரவுபதி அம்மன் கோயிலை கதவுகளை பூட்டி, அதன் நுழைவு வாயிலில் அமர்ந்து ஒருதரப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது வாக்காள அடையாளர் அட்டை, ரேஷன் கார்டு, ஆதார் கார்டு உள்ளிட்ட அரசு வழங்கிய குடியுரிமைக்கான அடையாள அட்டைகளை தரையில் வீசியெறிந்து அமைச்சர் பொன்முடியை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். இதனையடுத்து, விழுப்புரம் வருவாய் கோட்டாட்சியர் ரவிசந்திரன் தலைமையில் அரசு அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருந்த போது 2 பெண்கள் உள்ளிட்ட 4 பேர் திடீரென தங்களது உடலில் மண்ணெண்ணை ஊற்றி, தீக்குளிக்க முயன்றனர்.
அப்போது அவர்களிடம் இருந்து மண்ணெண்ணை கேனை பறித்து அவர்கள் மீது போலீசார் தண்ணீர் ஊற்றினர். இதனைத் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் உறுதி கூறியதால் அவர்கள் கலைந்துசென்றனர். இச்சம்பவத்தால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.