ஆடு மேய்க்கச் சென்ற சிறுமியை 5 பேர் பாலியல் தொல்லை கொடுத்து வீடியோ எடுத்து வைத்து மிரட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் பூண்டி ஒன்றியத்துக்கு உட்பட்ட மோவூர் பகுதியைச் சேர்ந்தவர் 17 வயது சிறுமி. இவரது தந்தை, தாய் இறந்துவிட்டனர். இந்நிலையில், சிறுமி கடந்த செப்.23ஆம் தேதி அங்குள்ள காட்டுப்பகுதியில் மாடுமேய்க்க சென்றபோது, அதே பகுதியைச் சேர்ந்த 5 இளைஞர்கள் சிறுமியை மறித்து பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர். அப்போது இந்த காட்சியை தங்களது செல்போனில் வீடியோ எடுத்து வைத்து மிரட்டி தொடர்ந்து சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளதாக தெரிகிறது. மேலும், தங்களது ஆசைக்கு இணங்க வேண்டும் என்று சிறுமியை வற்புறுத்தி வந்துள்ளனர். இதற்கு சிறுமி மறுத்ததால் உன் புகைப்படத்தை சமூக வலைதளங்களில் வெளியிட்டு அசிங்கப்படுத்தி விடுவோம் என்று மிரட்டல் விடுத்துள்ளனர்.

இந்நிலையில், கடந்த 24ஆம் தேதி காலை தனது வீட்டில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து தற்கொலைக்கு முயன்றார். இதையடுத்து, சிறுமி மீட்கப்பட்டு சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து திருவள்ளூர் அனைத்து மகளிர் காவல்நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுமியிடம் வாக்குமூலம் பெற்று விசாரணை மேற்கொண்டனர். இதையடுத்து, இவ்வழக்கில் அதே பகுதியை சேர்ந்த 5 இளைஞர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர். இதற்கிடையே, சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய சிறுமி, தாய், தந்தை இல்லாததால் வாழ்வாதாரத்திற்கு வழியில்லாமல் தவிக்கின்றார். “தன்னிடம் தவறாக நடந்துகொண்டவர்களை உடனடியாக கைது செய்து நடவடிக்கை எடுத்ததற்காக முதல்வர் முக.ஸ்டாலின், மாவட்ட காவல் எஸ்பி ஆகியோருக்கு அந்த சிறுமி நன்றி தெரிவித்துள்ளார். பெற்றோர் இல்லாமல் மிகவும் வறுமையில் உள்ளேன். எனவே, தனக்கு உதவி செய்ய முதல்வரை சந்திக்க வேண்டும்” என்று சிறுமி வீடியோ வெளியிட்டுள்ளார்.