தமிழ்நாட்டில் 500 டாஸ்மாக் கடைகளை மூடுவதற்கான அறிவிப்பு முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பிறந்தநாளான அடுத்த மாதம் 3ஆம் தேதி வெளியிடப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ்நாட்டில் மொத்தம் 5,329 டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் கடந்த இரண்டு ஆண்டுகளில் 96 கடைகள் மூடப்பட்ட நிலையில், மேலும் 500 மதுக்கடைகள் இந்த ஆண்டு மூடப்படும் என்று சட்டமன்றத்தில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவித்தார். அதன்படி, அமைச்சரின் அறிவிப்பை செயல்படுத்துவதற்கான நடவடிக்கைகளை டாஸ்மாக் நிறுவனம் எடுக்கத் தொடங்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில், கோயில்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு அருகே இருக்கும் மதுக்கடைகளை டாஸ்மாக் நிறுவனம் கண்டறிந்திருப்பதாகத் தெரிகிறது. இதையடுத்து, 500 மதுக்கடைகளை மூடுவதற்கான அறிவிப்பை கருணாநிதி பிறந்தநாளான அடுத்த மாதம் ஜூன் 3ஆம் தேதி டாஸ்மாக் நிறுவனம் வெளியிடலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது.