16 வயது சிறுவன் ஒருவன், 58 வயது பெண்ணை கொலை செய்து, சடலத்துடன் உடலுறவு வைத்துக் கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மத்தியப்பிரதேச மாநிலம் ரேவா மாவட்டத்தின் கைலாஷ்புரி கிராமத்தில் கடந்த 1ஆம் தேதி அடையாளம் தெரியாத பெண்ணின் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டது. இதுகுறித்த விசாரணையின்போது காவல்துறையினருக்கு பல அதிர்ச்சி தகவல்கள் கிடைத்துள்ளன. இந்த வழக்கு தொடர்பாக காவல்துறை தரப்பு கூறுகையில், “எங்களுக்கு கடந்த 1ஆம் தேதி காலையில் ஒரு அழைப்பு வந்தது. மறுமுனையில் பேசிய நபர், புதிதாக கட்டப்பட்டு வரும் வீட்டில் ஒரு சடலம் கிடப்பதாக கூறினார். நாங்கள் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தோம். அங்கு, ஒரு பெண்ணின் சடலம் நிர்வாண நிலையில், காயங்களுடன் இருந்தது. இதனைத் தொடர்ந்து விசாரணையை தொடங்கினோம். விசாரணையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. எனவே, நாங்கள் குழம்பிபோய் இருந்தோம். அப்போதுதான் எங்களுக்கு ஒரு தகவல் கிடைத்தது. அதாவது இந்த சம்பவத்தை அடுத்து இதே கிராமத்தில் இருந்து சிறுவன் ஒருவன் காணாமல் போயுள்ளார்.
ஆனால், இந்த சிறுவன் இப்படி ஒரு கொலையை செய்திருக்க வாய்ப்பு கிடையாது என்று நாங்கள் நினைத்துக்கொண்டிருந்தோம். ஆனால், சிறுவனின் போட்டோவை உயிரிழந்த பெண்மணியின் குடும்பத்தினரிடம் காட்டியபோது எங்களது கணிப்பு தவறு என்பதை உணர்ந்தோம். அதாவது இந்த சிறுவனின் குடும்பம் உயிரிழந்த பெண்மணியின் வீட்டை விட்டு கொஞ்சம் தூரத்தில்தான் வசித்து வந்துள்ளது. இவர்கள் மிகவும் ஏழ்மையில் இருந்துள்ளனர். இவர் வீட்டில் டிவி கிடையாது. எனவே டிவி பார்ப்பதற்காக சிறுவன் இந்த பெண்ணின் வீட்டிற்கு அடிக்கடி வந்து சென்றுள்ளார். அப்போது, பெண்ணின் வீட்டிலிருந்து செல்போன் ஒன்று காணாமல் போயுள்ளது. எனவே, இந்த சிறுவன் மீது பழி விழுந்துள்ளது. சிறுவன் இதனை மறுத்துள்ளான். ஆனால் சிறுவனை அந்த பெண் கடுமையாக திட்டி, இனி வீட்டிற்கு வரவேண்டாம் என கூறியுள்ளார்.
இந்த விவகாரம் அக்கிராமம் முழுவதும் தெரிந்திருக்கிறது. எனவே, அனைவரும் சிறுவனை கேலி செய்திருக்கிறார்கள். இதனால் சிறுவன் மிகுந்த மனஉளைச்சலுக்கு ஆளாகியுள்ளான். அப்போதிலிருந்து இந்த பெண்மணியை பழி தீர்க்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்திருக்கிறான். இப்படி இருக்கையில் காணாமல் போன சிறுவனை நாங்கள் நேற்று கண்டுபிடித்தோம். அவனிடம் மேற்கொண்ட விசாரணையில் உண்மையை அவன் ஒப்புக்கொண்டான். அதாவது, கடந்த 30ஆம் தேதி இரவு இந்த பெண்மணியின் கணவரும், மகனும் வெளியே சென்றிருக்கின்றனர். இதனை அறிந்த சிறுவன் அதிரடியாக வீட்டினுள் புகுந்து அந்த பெண்ணை அருகில் இருந்த கட்டுமான பணிகள் நடைபெற்று கொண்டிருந்த கட்டிடத்திற்கு கொண்டு சென்று அங்கு வைத்து அரிவாள் கொண்டு சரமாரியாக தாக்கியுள்ளார். இதில், பெண்மணியின் தலையிலும், பிறப்புறுப்பிலும் பலத்த காயம் ஏற்பட்டிருக்கிறது. இதனையடுத்து, அந்த பெண் மூச்சுத்திணறி உயிரிழந்துள்ளார். பின்னர், அவரை பாலியல் பலாத்காரம் செய்து அவர் அணிந்திருந்த நகைகளை எடுத்துக்கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்று பக்கத்து நகரத்தில் பதுங்கியிருந்தான்” என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.