ஹாமூன் புயல் வங்கதேசத்தின் சிட்டகாங் அருகே புதன்கிழமை கரையைக் கடந்தது. இதற்கிடையே, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் அடுத்த 6 நாட்களுக்கு (அக்.31 வரை) ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், வடமேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடகிழக்கு வங்கக்கடலில் நிலவிய மிகத் தீவிர புயலான ‘ஹாமூன்’ புதன்கிழமை காலை 1.30-2.30 மணியளவில் புயலாக வலுவிழந்து வங்கதேசத்தின் தெற்கு சிட்டகாங் அருகில் கரையைக் கடந்தது. இதனால் மேற்கு வங்கம் மற்றும் வங்க தேசத்தின் கடலோர மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கன மழை பெய்தது.
இதற்கிடையே, வடக்கு கேரளம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதேபோல், தென்மேற்கு வங்கக்கடலை ஒட்டிய தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாகவும், தேஜ் புயல் கரையைக் கடந்ததால் அங்கு சென்ற காற்று திசை மாறி வடகிழக்கு காற்றாக தமிழகத்தை ஒட்டிய வங்கக்கடல் பகுதிக்கு வரும் என்பதாலும், தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் அக்.26ஆம் தேதி முதல் அக்.31ஆம் தேதி வரை ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமானது வரையிலான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, ஞாயிற்றுக்கிழமை (அக்.29) மதுரை, திருச்சி, திண்டுக்கல், விழுப்புரம், கடலூா், பெரம்பலூா், அரியலூா், சிவகங்கை, கள்ளக்குறிச்சி மற்றும் டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்றும் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வியாழக்கிழமை (அக். 26) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.