நவீன ஊழலின் அடையாளமாக பரனூர் சுங்கச்சாவடி விளங்குவதாக எம்பி சு.வெங்கடேசன் விமர்சனம் செய்துள்ளார்.
அண்மையில் மத்திய அரசு 7 வகையான ஊழல்கள் குறித்து சி.ஏ.ஜி. ஆய்வறிக்கை வெளியாகி இருந்தது. அதில் ஒன்றுதான் டோல்கேட்டில் நடைபெற்ற ஊழல் குறித்த அறிக்கை. 10 டோல்கேட்டில் நடைபெற்ற ஊழல்கள் குறித்த பட்டியல் அதில் இடம்பெற்றிருந்தது. அந்த 10 டோல்கேட்களும் தமிழகத்தைச் சேர்ந்தது.
செங்கல்பட்டு பரனூர் டோல்கேட்டில் 53.27% வாகனங்களுக்கும், ஆத்தூர் சுங்கச்சாவடி வழியாக பயணித்த 36.43% வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்கப்படவில்லை என கணக்கு எழுதப்பட்டுள்ளது.கடந்த ஆகஸ்ட் 2019 முதல் ஜூன் 2020 வரை 1.17 கோடி வாகனங்கள் பயணம் செய்துள்ளது. அதில் 62.37 லட்சம் வாகனங்களுக்கு சுங்கக் கட்டணம் வசூலிக்கப்படவில்லை.
இதுதொடர்பாக மதுரை எம்பி சு.வெங்கடேசன் வெளியிட்டுள்ள சமூகவலைதள பதிவில், “செங்கல்பட்டு பரனூர் டோல் கேட்டில் ஓராண்டில் 1 கோடியே 12 லட்சம் வாகனங்கள் சென்றுள்ளது. இதில் 62 லட்சம் வாகனங்கள் டோல்கேட் கட்டணம் செலுத்தாத விஐபி வாகனங்கள் என்று கணக்கு எழுதப்பட்டுள்ளது. நவீன ஊழலின் அடையாளமான பரனூர் டோல்கேட்டை இனி ‘பாஜக மாடல் டோல்கேட்’ என்றே அழைக்கலாம்” என பதிவிட்டுள்ளார்.