அதிமுகவின் பொன்விழா எழுச்சி மாநாடு ஆகஸ்ட் 20ஆம் தேதி மதுரையில் நடைபெறவுள்ளது. 65 ஏக்கரில் மிகப்பெரிய அளவில் பந்தல் அமைக்கப்படுகிறது. பந்தல் முகப்பு கோட்டை வடிவில் அமைக்கப்படுகிறது. அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்ற பின் நடத்தப்படும் முதல் மாநாடு என்பதால் ஏற்பாடுகள் பிரம்மாண்டமாக நடைபெற்று வருகின்றன.
மேடையில் பிரமாண்டமான ‘டிஜிட்டல்’ திரை அமைக்கப்படுகிறது. 1.25 லட்சம் நாற்காலிகள் போடப்படுகின்றன. காலை 7.00 முதல் இரவு 7.00 வரை உணவு வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. காலையில் இட்லி, பொங்கல், வடை, உப்புமா, சட்னி, சாம்பார். மதிய உணவுக்கு வெஜிடபிள் பிரியாணி, தக்காளி சாதம், தயிர் சாதம், புளி சாதம், காய்கறிக் கூட்டு, பொரியல், அப்பளம் ஆகியவை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த மாநாட்டில் கலந்து கொள்பவர்களுக்கு உணவு சமைக்க சமையலர்கள், சமையல் உதவியாளர்கள், உணவு பரிமாறுவோர் என 10,000 பேர் பணி அமர்த்தப்பட உள்ளதாக கூறப்படுகிறது. 300 கவுன்டர்களில் பாக்கு மட்டை தட்டில் உணவு வழங்கவும், அமர்ந்து சாப்பிட டேபிள் நாற்காலிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. தேவைக்கேற்ப உணவு வழங்கும் கவுண்டர்கள் எண்ணிக்கையும் அதிகரிக்கப்படும்.
நிகழ்ச்சிகளை அனைவரும் பார்ப்பதற்கு வசதியாக எல்.இ.டி. திரைகள் ஆங்காங்கே அமைக்கப்பட உள்ளன. நகரின் முக்கியப் பகுதிகளிலும் எல்.இ.டி. திரையில் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வாகனங்களை நிறுத்த 200 ஏக்கருக்கும் மேற்பட்ட நிலப்பரப்பு, 15-க்கும் மேற்பட்ட இடங்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. 10 லட்சம் குடிநீர்பாட்டில்களுக்கு ‘ஆர்டர்’ தரப்பட்டுள்ளது. ஆங்காங்கே குடிநீர் சுத்திகரிப்பு கருவிகள் பொருத்தவும், சின்டெக்ஸ் தொட்டிகளில் குடிநீர் வைக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பந்தல் அருகே 150 மொபைல் கழிப்பறைகள் அமைக்கப்பட உள்ளன. இது தவிர ஆங்காங்கே தற்காலிக கழிப்பறைகள் அமைக்கப்படுகிறது.
இந்த மாநாட்டை காலை 8.00 மணிக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கட்சிக் கொடியேற்றி துவக்கி வைக்க உள்ளார். அவருக்கு தொண்டர்கள் அணிவகுப்பு மரியாதை அளிக்க உள்ளனர். கவியரங்கம், கருத்தரங்கம், பட்டிமன்றம், கலை நிகழ்ச்சிகளும் நடைபெறவுள்ளன. மாலையில் எடப்பாடி பழனிசாமி உரையாற்ற உள்ளார். மேலும், புகைப்படக் கண்காட்சிகளும் நடைபெறவுள்ளன. கண்காட்சியில் அதிமுக வரலாறு, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா திரைப்படம், அரசியல் வாழ்க்கையை பிரதிபலிக்கும் புகைப்படங்கள் இடம்பெற உள்ளன.
அதிமுகவின் இந்த பிரம்மாண்ட மாநாட்டுக்கு வரும்படி மதுரை மாவட்டத்தில் ஒவ்வொரு சட்டசபை தொகுதியிலும் தலா 10,000 குடும்பங்களுக்கு ‘வீடுதோறும் இலை’ என்ற தலைப்பின் கீழ் மரக்கன்றுடன் மாநாட்டு அழைப்பிதழ் கொடுக்க கட்சியினர் முடிவு செய்துள்ளனர்.