புதிதாக அரசு பணிகளில் சேர உள்ள 71,000 பேருக்கு பிரதமர் நரேந்திர மோடி வரும் 13-ம் தேதி பணி நியமன ஆணையை வழங்க உள்ளார்.
படித்த இளைஞர்கள், இளம் பெண்களுக்கு தங்களின் தகுதிக்கு ஏற்ப அரசு வேலைவாய்ப்புகளை அளிக்கும் நோக்கில் மத்திய அரசு ரோசர் மேளா என்ற திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. ரோசர் மேளா திட்டத்தின் கீழ் 10 லட்சம் வேலைவாய்ப்புகளை அளிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகள் வழங்கவும், அவர்களின் நிலை மேம்படவும், நாட்டின் வளர்ச்சிக்கான அவர்களின் பங்களிப்பு தொடரவும் இந்த திட்டம் முக்கிய பங்களிப்பை அளிக்கும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது..
அரசு பணிக்குத் தேர்வு செய்யப்படுபவர்களுக்கு இந்தத் திட்டத்தின் கீழ் மொத்தமாக பணி ஆணை வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் 71,000 பேருக்கு பேருக்கு பணி ஆணை வழங்குவதற்கான நிகழ்ச்சி வரும் 13-ம் தேதி நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி ஆன்லைன் முறையில் அனைவருக்கும் பணி ஆணை வழங்க உள்ளார். மேலும் அவர்களுடன் பிரதமர் மோடி காணொளி வாயிலாக உரையாற்ற உள்ளார்..
ரயில் மேலாளர், நிலைய மேலாளர், காவல் ஆய்வாளர், காவல் உதவி ஆய்வாளர், காவலர், இளநிலை கணக்கர், வருமான வரித்துறை ஆய்வாளர், வரி உதவியாளர், உதவி பேராசிரியர், ஆசிரியர், நூலகர், செவிலியர், நேரடி உதவியாளர் என அரசின் பல்வேறு பணிகளுக்கு இவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
பின்னர் இந்த பணிக்கு தேர்வான நபர்களுக்கு ஆன்லைன் முறையில் பயிற்சி அளிக்கப்படும். தங்களின் துறையில் எவ்வாறு பணியாற்ற வேண்டும், எத்தகைய தவறுகளில் ஈடுபடக் கூடாது போன்றவை குறித்து பயிற்சி வழங்கப்படும். அதன்பின்னர் அவர்கள் தங்களின் வழக்கமான பணியில் ஈடுபடத் தொடங்குவர்.