பாலம் இடிந்து விபத்துக்குள்ளான 24 மணி நேரத்திற்கு பின்னர் 9 பேர் இந்த வழக்கில் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர்.
குஜராத்தில் மோர்பி பகுதியில் நடந்த விபத்தில் இதுவரை 134 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பாலம் இடிந்த விபத்து நேற்று மாலை நடந்த நிலையில் இன்று 9 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். ஒரேவா நிறுவனத்தின் அதிகாரிகள், டிக்கெட் விற்பனை செய்தவர்கள், பாதுகாவலர் உள்பட 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தினேஷ்தேவ், தீபக் பரேக் ஆகியோர் ஒரேவா நிறுவனத்தில் மேலாளர்களாக பணியாற்றி வந்தனர். டிக்கெட் கவுண்டரில் பணியாற்றிய மன்சுக் தோபியா, மாதேவ் சோலன்கி, பாதுகாவலர் அல்பேஷ் கோகில், பிரகாஷ் பர்மர், திலிப் கோகில், முகேஷ் சவ்கான், தேவங் பர்மர். ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதுதொடர்பாக போலீஸ் அதிகாரி கூறுகையில், ’’ பாலத்தின் பராமரிப்பு பணிகளை சம்மந்தப்பட்ட நிறுவனம்தான் மேற்கொள்ள வேண்டும். பாலத்தை நிர்வகிக்கும் பணியை சம்மந்தப்பட்ட நிறுவனம் மேற்கொள்ள வேண்டும். எனவே பிரதான குற்றவாளிகளாக நிறுவனத்தை சேர்ந்தவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். விசாரணையில் யார் யார் பெயர் கூறப்பட்டுள்ளதோ அவர்கள் இந்த வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளார்கள் என்றார்.
ஐ.பி.சி. பிரிவு 304, 308, போன்ற பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவாகி உள்ளது. மச்சுச்சு ஆற்றின் குறுக்கே உள்ள இந்த பாலம் சுமார் 8 மாதங்களாக பயன்படுத்தப்படவில்லை. உள்ளூர் நிர்வாகம் இதன் பராமரிப்பு பொறுப்பை தனியார் நிறுவனத்திற்கு அளித்துள்ளது. இந்த பணிகள் முடிந்த நிலையில் நிர்வாகம் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கடந்த 26ம் தேதி கொண்டு வந்துள்ளது. இந்நிலையில் நேற்று 6.30 மணி அளவில் இடிந்து விழுந்தது. இதில் தண்ணீரில் விழுந்தவர்கள் சுமார் 130க்கும் மேற்பட்டவர்கள் பலியானார்கள் என எப்ஐஆரில் குறிப்பிடப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.
அனுமதியின்றி , சான்றிதழ் பெறாமல் முகவர்கள் இதனை திறந்து பயன்பாட்டிற்கு விட்டுள்ளார்கள். ஒரேவா நிறுவனத்துடன் பணியில் இருந்த ஊழியர்கள் பற்றிய விவரங்களை நாங்கள் விசாரணை நடத்தி வருகின்றோம். உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.
இதனிடையே 150 பேர் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டிய பாலத்தில் 675 டிக்கெட்டுகள் ஒரே நேரத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. விதியை மீறி பாலத்தில் 675 பேரை அனுமதிக்கப்பட்டதும் ஒரு காரணம் என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.