பெரிய நகரத்தில் பாலியல் சம்பவங்கள் அங்கும் இங்கும் நடக்கத்தான் செய்யும் என்று கர்நாடக உள்துறை அமைச்சர் பரமேஸ்வரா கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் பாரதி லே அவுட் பகுதியில் கடந்த 3ஆம் தேதி அதிகாலை 2 பெண்களை பின் தொடர்ந்து வந்த மர்ம நபர் ஒருவர், ஒரு பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். இதுதொடர்பான காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வந்தனர். இதையடுத்து, வீதியில் நடப்பதற்கும் பாதுகாப்பு இல்லாத நிலை பெங்களூருவில் ஏற்பட்டுள்ளதாக பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய கர்நாடக உள்துறை அமைச்சர் பரமேஸ்வரா, “பெங்களூரு போன்ற ஒரு பெரிய நகரத்தில் இங்கும் அங்குமாக பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் நடக்கத்தான் செய்யும். சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். இதுபோன்ற சம்பவம் நடக்கும் போதெல்லாம் அது மக்களின் கவனத்தை ஈர்க்கிறது.
பெங்களூருவில் விழிப்புடன் இருக்குமாறும், ரோந்துப் பணிகளை தீவிரப்படுத்துமாறும் பெங்களூரு காவல் ஆணையர் தயானந்தாவிடம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன். மழை, குளிரைப் பொருட்படுத்தாமலும் 24 மணி நேரமும் போலீசார் தொடர்ந்து பணியாற்றி வருகின்றனர். அதனால்தான் பெங்களூருவில் அமைதி நிலவுகிறது” என்று தெரிவித்தார்.
முன்னதாக பெங்களூருவில் நடந்த கூட்டு பலாத்கார சம்பவம் குறித்த கேள்விக்கு பதிலளித்த முதல்வர் சித்தராமையா, ‘பாஜக ஆட்சியில் பாலியல் வன்கொடுமைகள் நடக்கவில்லையா..? பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் நடக்கக்கூடாது, பெண்கள் பாதுகாக்கப்பட வேண்டும். ஆனால், சமூகத்தில் எப்போதும் கெட்டவர்கள் உள்ளனர்” என்று கூறினார். முதல்வரின் இந்த பேச்சை விமர்சித்த பாஜக எம்எல்ஏ அஸ்வத் நாராயண், இதை வெட்கக்கேடான நியாயப்படுத்தல் என்று விமர்சித்திருந்தார்.