வங்காளதேசம் பஞ்சகரா மாவட்டத்தில் நேற்று பக்தர்களை கோவிலுக்கு ஏற்றிச் சென்ற படகு ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. நேற்று பிற்பகலில் துர்கா பூஜை விழாவில் பங்கேற்க ஆலியா காட்டில் இருந்து பாதேஷ்வர் கோவிலை நோக்கி பிரார்த்தனை செய்ய வந்த பக்தர்களுடன் சென்று கொண்டிருந்த படகு திடீரென கவிழ்ந்தது. எதிர்பாரத நேரத்தில் படகு கவிழ்ந்ததில் 32 பேர் ஆற்றில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். அதிக பாரம் ஏற்றிச்சென்றதால் படகு கவிழ்ந்ததாக கூறப்படுகிறது.
இதனை தொடர்ந்து, ஆற்றில் மூழ்கியதால் காணாமல் போனவர்களை தேடும் பணி நடைபெற்றது. நேற்று 24 பேரின் உடல்களும் இன்று 8 பேரின் உடல்களும் மீட்கப்படுள்ளன. இதனையடுத்து படகு கவிழ்ந்த விபத்தில் ஆற்றில் மூழ்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 32 ஆக உயர்ந்துள்ளது.
அவுலியார் காட்டுப் பகுதியில் இந்த விபத்து நடந்துள்ளது. இந்த விபத்தில் மேலும் 60க்கும் அதிகமான பத்தர்கள் மாயமாகி இருப்பதாகவும் அவர்களை தேடும் பணி நடைபெற்று வருவதாகவும் வங்கதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதுவரை மீட்கப்பட்ட சடலங்களில் பெரும்பாலும் பெண்களும் குழந்தைகளும் அதிகம் என்று காவல்துறையினர் கூறியதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.