சிவகங்கை மாவட்டம் கல்லலில் பேக்கரி உரிமையாளரை மிரட்டி 50 லட்சம் ரூபாய் பறித்த வழக்கில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய செயலாளர் உட்பட 2 பேரை சிபிசிஐடி காவல்துறையினர் கைது செய்துள்ளனர். பேக்கரி நடத்தி வந்தவர் நாச்சியப்பன் இவர் மீது 15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை வழங்கியதாக தேவகோட்டை மகளிர் காவல் நிலையத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது.
இந்த விவகாரத்தில் நாச்சியப்பன் மீது வழக்குப் பதியாமல் இருப்பதற்கு சிலர் பேச்சுவார்த்தை நடத்தி 50 லட்சம் ரூபாய் வரையில் வாங்கி உள்ளனர். மேலும் பணம் கேட்டு அவரை விரட்டி வந்ததாக கூறப்படுகிறது இதன் பிறகு அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதனால் மணமுடைந்து காணப்பட்ட அவர், கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 25ஆம் தேதி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
இதற்கு நடுவே அந்த 15 வயது சிறுமியின் பாலியல் தொல்லை குறித்த வழக்கை காவல்துறையினர் முறையாக விசாரிக்கவில்லை. ஆகவே இந்த வழக்கை சிவிசிஐடிக்கு மாற்றி உத்தரவிட வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளையில் சிறுமியின் தாயார் மனு தாக்கல் செய்தார்.
அதே நேரம் தற்கொலை செய்து கொண்ட நாச்சியப்பன் மனைவி சகுந்தலா தேவியும் தன்னுடைய கணவரிடமிருந்து பணத்தைப் பறித்து தற்கொலைக்கு காரணமாக இருந்தவர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் இதற்கு சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று தெரிவித்து உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார்.
இந்த இரு மனுக்களையும் விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவு பிறப்பித்தது. இதனை தொடர்ந்து, மதுரை சிபிசிஐடி டி எஸ் பி சுரேஷ் பீட்டர் தலைமையிலான காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர் இதில் சகுந்தலா தேவி புகார் தெரிவித்தபடி நாச்சியப்பன் மிரட்டி பணம் பறிக்கப்பட்டிருக்கிறார் என்பது தெரியவந்தது.
இதனை தொடர்ந்து, மிரட்டி பணம் பறித்த வழக்கில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய செயலாளர் குணாளன் (45) தேவகோட்டை சேர்ந்த பாலாஜி (47) சொல்லிட்ட இருவரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.