ஒரே பாலின திருமணத்திற்கு சட்ட அங்கீகாரம் வழங்கலாமா என்பது குறித்து உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கவுள்ளது.
ஒரே பாலின திருமணத்திற்கு சட்ட அங்கீகாரம் வழங்கவேண்டும் என்பது தொடர்பான மனுக்களை விசாரித்த தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் மற்றும் நீதிபதிகள் எஸ்.கே.கவுல், எஸ்.ஆர்.பட், ஹிமா கோலி, பி.எஸ்.நரசிம்மா ஆகியோர் அடங்கிய அமர்வு. ஒரே பாலின திருமணத்திற்கு சட்டப்பூர்வமாக அங்கீகாரம் அளிக்க கோரிய மனுக்கள் மீதான தீர்ப்பை கடந்த மே மாதம் 11ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டிருந்தது.
முன்னதாக வழக்கு விசாரணையின்போது, ஒரே பாலின திருமணத்திற்கு நீதிமன்றம் சட்ட அங்கீகாரம் அளிக்க முற்படும் நடவடிக்கை என்பது தற்போதைய சூழலுக்கு சரியானதாக இருக்காது, அதனால் ஏற்படும் விளைவுகளை நீதிமன்றம் தொடர்ந்து கண்காணிக்க முடியாது இந்த விவகாரத்தில் ராஜஸ்தான், ஆந்திரா, அசாம் ஆகிய மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்திருந்தன என்று மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும் ஒரே பாலினத்தவர்களில் உண்மையான மனிதாபிமான பிரச்சனைகளுக்கு தீர்வு காண மத்திய அமைச்சரவை செயலாளர் தலைமையில் குழு அமைக்கப்படும் என்றும் மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்திருந்தது.
இந்த நிலையில், உச்சநீதிமன்ற வலைதளத்தில் வெளியிடப்பட்டுள்ள தகவலின் படி, ஒரே பாலின திருமணத்திற்கு அங்கீகாரம் அளிக்கும் மனுமீதான தீர்ப்பு இன்று வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.