திருப்பத்தூரில் தொண்டர்கள் மத்தியில் பேசிய பாஜக தலைவர் அண்ணாமலை, “காங்கிரஸ் 10 ஆண்டுகள் மத்தியில் ஆண்ட போது 12 லட்சம் கோடி நிலக்கரியில் இருந்து அனைத்திலும் ஊழல் செய்தனர். 10 கட்சிகள் இணைந்து ஆட்சிக்கு வந்தனர். அவர்களுக்கு கொள்கைகள் கிடையாது. இவர்கள் கூட்டணி வைத்த ஒவ்வொரு கட்சியும் இந்தியாவை கூறு போட்டு ஒவ்வொரு இலாகாவாக பிரித்து ஆட்சியை நடத்தினார்கள். மன்மோகன் சிங் ஒரு பொம்மை பிரதமராக மட்டுமே அமர்ந்திருந்தார். அவர் நல்ல மனிதர்.
காங்கிரசுக்கு தனி பெரும்பான்மை இல்லை. இதனால் கூட்டணியில் உள்ள அனைவரும் ஊழல் செய்தனர். யாரும் பார்க்காத ஊழல் ஆட்சியை காங்கிரஸ் 10 ஆண்டுகளில் செய்தது. முதல்வர் ஸ்டாலின் முதலீட்டாளர் மாநாடு முடிந்த பின்னர் ஏன் வெளிநாடு செல்ல வேண்டும்? இந்த பொய்யை யாராவது நம்புவோமா?. ஒரு தற்குறி கூட்டம் நம்மை அரசாள்வதை மக்கள் ஏற்றுகொள்ள மாட்டார்கள். கோபாலபுரத்தில் ஆரம்பிக்கும் குடும்ப ஆட்சி பட்டிதொட்டி எங்கும் நடக்கிறது. தென் சென்னை எம்பி தமிழச்சி தங்கபாண்டியன், அவர் சகோதரர் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு, மத்திய சென்னை எம்பி தயாநிதிமாறன், வட சென்னை எம்பி கலாநிதி வீராசாமி, ஆர்காடு வீராசாமியின் மகன்.
கள்ளக்குறிச்சி எம்பி பொன்முடி மகன் கௌதம சிகாமணி இவர்களுக்கு எல்லாம் ஆள தகுதியுள்ளது. ஆனால் நம் குழந்தைகள் நன்றாக படித்தாலும், டி.என்.பி.எஸ்.சி.யில் வேலை கிடைக்கவில்லை. ஆனால், இவர்கள் எந்த தகுதியுமின்றி ஆளுகின்றனர். குடும்ப அரசியலை செய்கின்றனர்” என்று விளாசினார்.