சுவிட்சர்லாந்து நாட்டில் மூடநம்பிக்கையால் ஒரே குடும்பத்தைச் சார்ந்த நான்கு பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் உலகத்தையே அதிர்ச்சிடைய செய்தது நமக்கு நினைவிருக்கலாம். அந்த சம்பவம் தொடர்பாக தற்போது பல அதிர்ச்சி அளிக்கும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. கடந்த வருடம் இதே மார்ச் மாதம் 24 ஆம் தேதி சுவிட்சர்லாந்தின் மான்ட்ரக்ஸ் நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ஏழாவது மாடியிலிருந்து 8 வயது சிறுமி, 15 வயது சிறுவன் அவர்களது தந்தை தாய் மற்றும் தாயின் சகோதரி ஆகியோர் ஒருவர் பின் ஒருவராக குதித்து தற்கொலை செய்தனர். இந்த சம்பவத்தில் 15 வயது சிறுவன் மட்டும் படுகாயங்களுடன் உயிர் பிழைத்து இருக்கிறான். ஆனால் அந்த சிறுவனுக்கு எதுவுமே ஞாபகமில்லை.
இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த அதிகாரிகள் தற்போது அந்த சம்பவம் நடந்து ஒரு வருடத்திற்கு பிறகு பல அதிர்ச்சியூட்டும் தகவல்களை பகிர்ந்திருக்கின்றனர். அந்த தகவல்களின்படி இந்தக் குடும்பத்தினர் பிரான்ஸிலிருந்து வந்து சுவிட்சர்லாந்தில் குடியேறி இருக்கின்றனர். இவர்கள் கோவிட் மற்றும் உக்ரைன் போரினால் மனதளவில் மிகவும் பாதிப்படைந்துள்ளனர். மேலும் உலகம் நம்மை வெறுக்கிறது அது மோசமானது என்ற நம்பிக்கையை ஆழமாக மனதில் கொண்டுள்ளனர். மரணம் என்பது ஒரு உலகிலிருந்து வேறு உலகத்திற்கு செல்கிறது என்பதையும் தீவிரமாக நம்பியுள்ளனர். இதன் காரணமாகத்தான் அவர்கள் ஒருவர் பின் ஒருவராக குதித்து இறக்கும் பொழுது ஒருவருக்கும் அச்சமோ, பதட்டமோ இல்லை என தெரிவித்துள்ளனர். மேலும் அவர்களது சாவுக்கு யாரும் காரணமில்லை அவர்கள் தற்கொலை தான் செய்துள்ளார்கள் எனவும் அதிகாரிகள் இந்த வழக்கு தொடர்பாக தெரிவித்துள்ளனர்.