ராமநாதபுரம் மாவட்டம் மோர்பண்ணையைச் சேர்ந்த வழக்கறிஞர் தீரன் திருமுருகன், உயர் நீதிமன்ற கிளையில் நீதிமன்ற அவமதிப்பு மனுவினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், "தமிழகத்தின் 3வது முக்கிய நகரமாக மதுரை மாநகரம் உள்ளது. மதுரையை ஆண்ட பாண்டிய மன்னர்களின் சின்னம் மீன். அதை நினைவுப்படுத்தும் வகையில் மதுரை ரயில் நிலையத்தில் 1999-ல் 15 அடி உயரம், 3 டன் எடையில் 3 மீன்கள் கொண்ட வெண்கல சிலை 1999-ல் அமைக்கப்பட்டது.
கடந்த 3 ஆண்டுக்கு முன்பு மதுரை ரயில் நிலையம் புதுப்பிக்கும் பணி தொடங்கப்பட்ட போது அந்த மீன் சிலை அகற்றப்பட்டது. பணி முடிந்து பல மாதங்களாகியும் மீன் சிலை மீண்டும் அமைக்கப்படவில்லை. எனவே மதுரை ரயில் நிலையத்தில் மீண்டும் 3 மீன்கள் வெண்கல சிலை மற்றும் நீருற்று அமைக்க உத்தரவிட வேண்டும் என கூறப்பட்டிருந்தது.
இந்நிலையில் இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், “மதுரை ரயில் நிலையத்தில் பேருந்து நிறுத்தம், மெட்ரோ ரயில் நிலையம் காரணமாக ஏற்கெனவே இருந்த இடத்தில் மீன் சிலை அமைக்க முடியாது. ஆனால் மதுரையை ஆண்ட பாண்டிய மன்னர்களின் அடையாளமாக மக்கள் மீன் சிலையை பார்க்கின்றனர். இதனால் மதுரையில் மாநகராட்சி எல்லைக்குள் முக்கிய சந்திப்பு அல்லது முக்கிய இடத்தில் மீன் சிலை அமைக்க வேண்டும். மீன் சிலை அமைக்க தகுதியான இடத்தை தேர்வு செய்ய மூத்த வழக்கறிஞர் காந்தி தலைமையில் மாநகராட்சி ஆணையர், மதுரை எம்பி, மாநகராட்சி எல்லைக்குட்ட பேரவைத் தொகுதியை சேர்ந்த எம்எல்ஏக்கள். மாவட்ட ஆட்சியர், மாநகர் காவல் ஆணையர், போக்குவரத்து இணை ஆணையர், தேசிய நெடுஞ்சாலைத்துறை திட்ட மேலாளர், நெடுஞ்சாலை தலைமை பொறியாளர், தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத் தலைவர் ஆகியோர் கொண்ட குழு அமைக்கப்படுகிறது. அதுவரை மீன் சிலையை ரயில்வே நிர்வாகம் பாதுகாக்க வேண்டும்” என உத்தரவிட்டனர்.