நிச்சயிக்கப்பட்ட மணமகளை கடைசி நேரத்தில் மணமகன் வீட்டார் வேண்டாம் என்று கூறிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் பகுதியைச் சேர்ந்தவர் 30 வயது இளைஞர். இவர் ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு ஹைதராபாத் பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டது. திருமணம் நேற்று முன்தினம் நடத்த திட்டமிட்டது. அதன்படி திருமணத்திற்கான ஏற்பாடுகளும் தீவிரமாக நடந்து வந்தது. மணமகனின் வீட்டார் பெண்ணின் வீட்டாரிடம் சீர்வரிசையாக கட்டில், மெத்தை, பீரோ, பிரிட்ஜ் உள்ளிட்ட பொருட்களை கேட்டிருந்தனர். அதன்படி, மணப்பெண்ணின் வீட்டார் அவர்கள் கேட்டதை விட குறைவான பொருட்களை திருமணத்திற்கு முன்தினம் மண்டபத்திற்கு கொண்டு வந்திருந்தனர்.
அதன்படி, திருமணம் ஏற்பாடுகள் எல்லாம் முடிந்து, நேற்று முன்தினம் திருமணத்திற்காக மண்டபத்தில் மணப்பெண்ணின் உறவினர்கள் வந்தனர். மேலும், மண்டபத்தில் விருந்து சமைத்து தங்களது உறவினர்களுடன் மாப்பிள்ளை வீட்டாருக்காக காத்துக் கொண்டு இருந்தனர். நீண்ட நேரம் ஆகியும் மணமகன் வீட்டார் மண்டபத்திற்கு வரவில்லை. இதனால், அதிர்ச்சி அடைந்த மணப்பெண் வீட்டார் மாப்பிள்ளை வீட்டிற்கு சென்று பார்த்தனர். மாப்பிள்ளை வீட்டிற்கு சென்ற மணப்பெண்ணின் தந்தை, மாப்பிள்ளை மற்றும் அவர்களது உறவினர்களை திருமணத்திற்கு வரும்படி அழைத்தார். அப்போது மணமகனின் தந்தை, ”நாங்கள் கேட்ட சீர்வரிசை பொருட்களை நீங்கள் தரவில்லை எனவும் நீங்கள் கொண்டு வந்த பொருட்களான மெத்தை, கட்டில் ஏற்கனவே பயன்படுத்தியது போல் பழையதாக உள்ளது” என்றார். மேலும், இந்த திருமணத்தில் எனது மகனுக்கு விருப்பம் இல்லை என்றும் தெரிவித்தார்.
இதையடுத்து, மணப்பெண்ணின் தந்தை, சீர்வரிசை பொருட்களை புதிதாக வாங்கி தருவதாகவும், கல்யாணத்தை நிறுத்தினால் உறவினர்கள் மத்தியில் அவமானம் ஆகிவிடும் என்றும் பலமுறை கெஞ்சி பார்த்தார். இதற்கு மனம் இறங்கால் மணமகன் வீட்டார் அநாகரீகமாக பேசி திருப்பி அனுப்பியுள்ளனர். இதனால் மனமுடைந்த மணப்பெண்ணின் பெற்றோர் காவல்நிலையத்தில் வரதட்சணை கேட்டதாக கூறி மணமகன் மற்றும் அவரது பெற்றோர் மீது புகார் அளித்தனர். அதனடிப்படையில், போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.