மயிலாடுதுறை மாவட்டத்தில் மகனை பள்ளியில் விட்டுவிட்டு வரும்போது தாய்க்கு நேர்ந்த துயர சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக லாரி டிரைவரை கைது செய்துள்ள காவல் துறையினர் அவரிடம் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
மயிலாடுதுறை மாவட்டம் சோளம் பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் முத்து. இவரது மனைவி ராஜேஸ்வரி. இந்த தம்பதிக்கு ஒரு மகன் இருக்கிறார். இவர் அங்குள்ள தனியார் பள்ளி ஒன்றில் படித்து வருகிறார். முத்து வெளிநாட்டில் வேலை செய்து வருகின்ற நிலையில் தனது இருசக்கர வாகனத்தில் மகனை தினமும் பள்ளிக்கு சென்று விட்டு வருவதும் அழைத்து வருவதும் ராஜேஸ்வரிக்கு வழக்கமாக இருந்திருக்கிறது.
இந்நிலையில் வழக்கம் போல் தனது ஸ்கூட்டி வாகனத்தில் இன்று காலை மகனை பள்ளியில் விட்டுவிட்டு வீடு திரும்பும் போது எதிர்பாராத விதமாக இவரது வாகனத்தில் லாரி ஒன்று மோதியது. இதில் நிலை தடுமாறி விழுந்த ராஜேஸ்வரியின் தலையில் லாரியின் பின் சக்கரம் ஏறி இறங்கியது. இதில் சம்பவ இடத்திலேயே தலை நசுங்கி துடிதுடித்து பலியானார் ராஜேஸ்வரி.
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ராஜேஸ்வரியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவத்திற்கு காரணமான லாரி டிரைவரை கைது செய்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். மகனை பள்ளிக்கு விடச் சென்ற தாய் கோரமான விபத்தில் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.