fbpx

Tn Govt : தஞ்சாவூர் மாவட்டத்தில் புதிய வட்டம் உதயம்…! முதல்வர் ஸ்டாலின் அதிரடி உத்தரவு…!

தஞ்சாவூர் மாவட்டத்தில் ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை ஆகிய வட்டங்கள் சீரமைப்பு புதிய வட்டமாக திருவோணம் உதயம்.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் 2022-2023-ஆம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கையின் போது வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர், “தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை ஆகிய வட்டங்களைச் சீரமைத்து புதிய திருவோணம் வருவாய் வட்டம் உருவாக்கப்படும்” என்னும் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்கள்.

ஒரத்தநாடு வட்டத்திலுள்ள திருவோணம் ஒன்றியத்திற்கு உட்பட்ட கிராமங்களைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான மக்கள், அத்தியாவசியச் சேவைகளான சாதிச் சான்று, வருமானச் சான்று, இருப்பிடச் சான்று, வாரிசுச் சான்று, பட்டா மாற்றம் உள்ளிட்ட பல்வேறு சான்றுகளையும், வருவாய்த் துறையின் பிற சேவைகளையும் பெறுவதற்காக ஏறத்தாழ 34 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஒரத்தநாடு வட்டத்தின் தலைமையிடத்திற்கு மிகுந்த சிரமத்துடன் வந்து செல்ல வேண்டியுள்ளது.

இதனால் அப்பகுதியில் உள்ள கிராம மக்களுக்குப் பொருளாதாரச் செலவுகள் அதிகமாகின்றன. அத்துடன் இந்தச் சேவைகளைப் பெறுவதற்காக அவர்கள் நாள் முழுவதும் செலவிட்டு அலையவும் வேண்டியுள்ளது. ஒவ்வொரு நாளும் பொது மக்களின் துயர்துடைப்பதில் மிகுந்த அக்கறை செலுத்தி வருகின்ற முதல்வர் ஸ்டாலின் திருவோணம் பகுதி மக்களின் சிரமங்கள் தம்முடைய கவனத்திற்கு வந்ததைத் தொடர்ந்து அவற்றை உடனடியாகக் களைவதற்கு முடிவு செய்தார்கள்.

அந்த முடிவைச் செயல்படுத்தும் விதமாக தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை ஆகிய இரண்டு வருவாய் வட்டங்களையும் சீரமைத்து, காவாளப்பட்டி, சில்லத்தூர், திருநெல்லூர், வெங்கரை ஆகிய 4 குறு வட்டங்களையும், 45 வருவாய் கிராமங்களையும் உள்ளடக்கி திருவோணத்தைத் தலைமையிடமாகக் கொண்டு புதிய திருவோணம் வருவாய் வட்டத்தினை உருவாக்கி முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதற்குரிய அரசாணை வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையினால் வெளியிடப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

Aavin: அதிரடி விலை உயர்வு!… இன்றுமுதல் அமல்!… ஆவின் நிர்வாகம் அறிவிப்பு!

Sun Mar 3 , 2024
Aavin:ஆவின் பாலகங்களில் விற்பனை செய்யப்படும் ஐஸ்கிரீம் விலை திடீரென உயர்த்தப்பட்டு இருக்கிறது. தமிழக அரசின் பால்வளத்துறையின் கீழ் இயங்கும் கூட்டுறவு நிறுவனமான ஆவின் சார்பில் பால் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஆவின் நிறுவனம் பால் மட்டுமின்றி பால்கோவா, நெய், வெண்ணெய், மில்க் ஷேக், ஹெல்த் மிக்ஸ், யோகர்ட், பால் பிஸ்கட், சாக்லெட், குல்பி, கப் ஐஸ்கிரீம், சாக்கோ பார், சாக்கோ பீஸ்டு, கசாட்டா, கேன்டி, பிரீமியம் என 100-க்கும் மேற்பட்ட […]

You May Like