வடக்கு அந்தமான், அதை ஒட்டிய மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக வடதமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவி வருகிறது.
இதன் காரணமாக இன்று முதல் 29ஆம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், வடக்கு அந்தமான் மற்றும் அதனையொட்டிய மத்திய கிழக்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி வரும் 29ஆம் தேதி உருவாகுவதாக இந்திய வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. 30ஆம் தேதி தாழ்வுப்பகுதி உருவாகும் என கணிக்கப்பட்ட நிலையில், ஒருநாள் முன்னதாகவே உருவாகிறது. இதனால், தமிழ்நாட்டில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.