ஜப்பானில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 6.3ஆக பதிவாகியுள்ளது.
ஜப்பானின் மத்திய இஷிகாவா பகுதியில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்த நாட்டின் நேரப்படி மதியம் 2.42 மணிக்கு மத்திய இஷிகாவாவில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தினை உணர்ந்த பொதுமக்கள் தங்களது வீடு, அலுவலகங்களை விட்டு அலறியடித்து வெளியே ஓட்டம் பிடித்தனர். இந்த நிலநடுக்கத்தை ஜப்பான் வானிலை ஆய்வு மையம் உறுதி செய்துள்ளது. இதுதொடர்பாக தகவல் தெரிவித்துள்ள வானிலை மையம் , “ஜப்பானில் 6.3 என்ற ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் அதிர்ஷ்டவசமாக சுனாமி எச்சரிக்கை எதுவும் இல்லை” என தெரிவித்துள்ளது.
இருப்பினும் இஷிகாவாவின் சுசுநகரில் ரிக்டர் அளவுகோலில் 7 வரை பதிவாகி இருக்கலாம் என கூறப்படுகிறது. ஏனென்றால் இங்கு தான் அதிகளவில் நிலஅதிர்வு உணரப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் காரணமாக ஜப்பானில் ரயில் சேவைகள் முடங்கி உள்ளது. இதனால் ஜப்பானில் பிரபலமான சுற்றுலாத் தலமான நாகானோ – கனாசாவா இடையே ஷிங்கன்சென் புல்லட் ரயில்கள் நிறுத்தப்பட்டன.