பெங்களூருவில் ஹோட்டல் அதிபர் கொலை செய்யப்பட்ட வழக்கில், அவரது மனைவி மற்றும் அவரது கள்ளக்காதலன் உள்ளிட்டோரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த கொலையின் பின்னணி குறித்து திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் உள்ள சன்னப்பட்டினத்தைச் சேர்ந்தவர் அருண்குமார் (34). இவரது மனைவி ரஞ்சிதா (23). இவர்கள் சன்னசந்திராவில் வசித்து வந்துள்ளனர். இந்நிலையில், அருண்குமார் கடந்த ஜூன் 29ஆம் தேதி தெற்கு பெங்களூருவில் உள்ள காட்டிகெரேபாளையாவில் உள்ள நைஸ் சாலை அருகே சடலமாக கிடந்தார். இது தொடர்பாக தலகட்டபுரா போலீசார் கொலை வழக்குப் பதிவு செய்தனர். மறுநாள் சடலம் யாருடையது என்பதை அடையாளம் கண்டனர்.
அவரது மனைவி ரஞ்சிதாவை பிடித்து விசாரித்த போது, முண்ணுக்கு பின் முரணாக பதில் அளித்துள்ளார். இதையடுத்து தீவிரமாக விசாரித்த போது, கள்ளக்காதலன் மற்றும் நண்பர்களுடன் சேர்ந்து கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். இதையடுத்து, ரஞ்சிதா மற்றும் அவரது கள்ளக்காதலன் கணேஷ் அவரது நண்பர்கள் சிவானந்தா, சரத் மற்றும் தீபக் ஆகியோரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். இது தொடர்பாக போலீசார் கூறுகையில், அருண்குமார் மர்ம நபர்களால் கொல்லப்பட்ட நிலையில், ரஞ்சிதாவின் நடத்தையில் எங்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து அவரை போலீஸ் காவலில் எடுத்து விசாரித்த போது தான் எங்களுக்கு உண்மைகள் வெளிச்சத்திற்கு வந்தது.
கள்ளக்காதலன் கணேஷ் மற்றும் அவரது நண்பர்களுடன் சேர்ந்து தனது கணவரை கொலை செய்ய சதி செய்ததை ஒப்புக்கொண்டார். ரஞ்சிதாவின் கணவர் அருண்குமார் தனது ஹோட்டல் தொழிலுக்காக கணேஷிடம் இருந்து சுமார் ரூ.8 லட்சம் கடன் வாங்கியிருக்கிறார். ஆனால், அந்த கடனை திருப்பி செலுத்த முடியவில்லை. அவர் பெரிய அளவில் நஷ்டம் அடைந்திருந்தார். அருண்குமார் இறப்பதற்கு 3 வாரங்களுக்கு முன்பு ஹோட்டலை மூட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதற்கிடையே, கடன் கேட்டு கணேஷ் அடிக்கடி சென்று ரஞ்சிதாவின் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது, இருவருக்கும் இடையே கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது.
இந்த கள்ளக்காதல் விவகாரம் 4 மாதங்களுக்கு முன்பு அருண்குமார் கண்டுபிடித்து இருவரையும் கண்டித்துள்ளார். இருந்தும், ரஞ்சிதா-கணேஷ் தொடர்ந்து சந்தித்து தங்கள் கள்ளக்காதலை வளர்ந்து வந்துள்ளனர். இந்நிலையில், கடன் தொல்லையால் இருந்த தனது கணவர் அருண்குமாரை தீர்த்துக்கட்டிவிட்டு, கள்ளக்காதலன் கணேஷ் உடன் சந்தோஷமாக வாழ திட்டம் தீட்டினார் ரஞ்சிதா. அருண்குமாரை கொல்வதற்கு கணேஷ் தனது நண்பர்களின் உதவியை கேட்டார். அவர்களும் ஜூன் 28 அன்று கொன்றுவிடலாம் என்று ஸ்கெட்ச் போட்டனர். ஹோட்டலை மீண்டும் திறப்பது தொடர்பான நிதி விஷயங்களைப் பற்றி பேசலாம் என்று அருண் குமாரை அழைத்துள்ளனர்.
அப்போது அருண்குமாரை, ஆட்டோரிக்ஷாவில் கட்டிகெரேபாளையத்திற்கு அழைத்துச் சென்றனர். அங்கு, கணேஷும் அவரது நண்பர்களும் குமாரை அரிவாளால் சரமாரியாக வெட்டிக் கொன்றனர். பின்னர் அங்கிருந்து தப்பியோடிவிட்டனர். இந்நிலையில், ரஞ்சிதா, எதுவும் தெரியாதது போல் நாடகம் ஆடுவதற்காக ஜூன் 28ஆம் தேதி மாண்டியாவில் உள்ள தனது பெற்றோரின் வீட்டிற்குச் சென்று, ஜூன் 30ஆம் தேதி தான் திரும்பினார். இந்த செயலை பார்த்த போலீசார், அவர் மீது சந்தேகத்தை திருப்பினர். கடைசியில் கள்ளக்காதலன் மற்றும் நண்பர்களுடன் சிக்கி கொண்டார்.