பெங்களூரு கே.ஆர்.புரத்தில் கல்லூரி மாணவி ஒருவர் மீது கிரேன் ஏறிச் செல்லும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூரு கே.ஆர்.புரத்தில் சிறுதொழில் செய்து வருபவரின் மகள் தனியார் கல்லூரியில் பி.காம்.இறுதியாண்டு படித்துவந்தார். நேற்று இறுதித் தேர்வு நடைபெற்றுள்ளது. தேர்வை முடித்துவிட்டு அந்த மாணவி சாலை ஓரத்தில் இறங்கி நடந்து சென்றுகொண்டிருந்தார்.அப்போது பின்னால் வந்த ராட்சத கிரேன் ஒன்று மாணவி மீது ஏறி இறங்கியது. இந்த காட்சிகள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பலத்த காயம் அடைந்த கல்லூரி மாணவி அருகில் இருந்த தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டதால் மாணவியை காப்பாற்ற முடியாமல் போனதாக மருத்துவர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.
தனியார் மருத்துவமனையில் சுமார் ரூ.3 லட்சம் வரை செலவு செய்த நிலையில் மாணவி உயிர் பிழைக்காதது குடும்பத்தினரை வேதனைக்குள்ளாக்கி உள்ளது. தேர்வு எழுதிவிட்டு திரும்புவாள் என வீட்டில் காத்திருந்த பெற்றோருக்கு தலையில் இடி விழுந்ததுபோல இந்த சம்பவம் நேர்ந்துள்ளது.
இதனிடையே கிரேன் ஓட்டி வந்த ஓட்டுனர் அலட்சியப்போக்கால் இந்த மரணம் ஏற்பட்டுள்ளதாக சி.சி.டி.காட்சிகளில் மூலம் போலீசார் தெரிவித்துள்ளனர். கிரேன் ஓட்டி வந்த நபர் போலீசில் சரணடைந்துள்ளார். வாகனத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக விபத்து ஏற்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.