தஞ்சை மாவட்டம் அய்யம்பேட்டை அருகே கண்டக்கரயம் மெயின் ரோட்டை சேர்ந்தவர் செந்தில்குமாரின் மூத்த மகள் சுஷ்மிதாசென்னும், கணபதி கிராமம் தட்டாரத்தெருவை சேர்ந்தவர் கந்தனின் மகள் ராஜேஸ்வரியும் அய்யம்பேட்டை அருகே பசுபதிகோவிலில் உள்ள புனித கபிரியேல் அரசு உதவி பெறும் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தனர்.
நேற்று மாலை பள்ளி வகுப்பு நிறைவடைந்ததை அடுத்து சுஷ்மிதாசென்னும், ராஜேஸ்வரியும் வீட்டுக்கு செல்ல பள்ளி வகுப்பறையில் இருந்து வெளியே வந்தனர். அப்போது அந்த பகுதியில் கனமழை பெய்த காரணத்தால் வளாகத்தில் இருந்த ஒரு தூங்கு மூஞ்சி மரம் திடீரென வேரோடு சாய்ந்து சுஷ்மிதாசென் மற்றும் ராஜேஸ்வரி ஆகிய இருவர் மீதும் விழுந்தது.
இதனைக்கண்ட பள்ளி நிர்வாகத்தினர் மற்றும் ஆசிரியைகள் மாணவிகளை மீட்டு சிகிச்சைக்காக அய்யம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களை பரிசோதனை செய்த டாக்டர்கள் சுஷ்மிதாசென், ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். ராஜேஸ்வரி மேல் சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
இந்நிலையில் உயிரிழந்த மாணவி சுஷ்மிதாசென் குடும்பத்தினருக்கு ஆறுதல் மற்றும் ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் எனவும், படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மாணவி ராஜேஸ்வரிக்கு ரூ.1லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இது குறித்து வெளியான அறிவிப்பில் “தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் வட்டம், பசுபதிகோவில்-1 கிராமத்தில் உள்ள தனியார் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பயின்று வரும் மாணவிகள் பாபநாசம் வட்டம், உள்ளிக்கடை, கண்டகரையத்தைச் சார்ந்த செல்வி. சுஷ்மிதாசென், த/பெ.செந்தில்குமார் (வயது-15) மற்றும் பாபநாசத்தைச் சேர்ந்த செல்வி.இராஜேஸ்வரி, த/பெ.கந்தன் (வயது-15) ஆகிய இருவர் மீதும் நேற்று (29-8-2023) மாலை பெய்த மழை மற்றும் காற்றின் காரணமாக பள்ளியின் அருகிலுள்ள மரம் வேறோடு சாய்து விழுந்ததில் செல்வி.சுஷ்மிதாசென் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என்ற துயரமான செய்தியினைக் கேட்டு மிகுந்த வருத்தமடைந்தேன்.
மேலும் இவ்விபத்தில் படுகாயமடைந்து தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள செல்வி.இராஜேஸ்வரிக்கு சிறப்பு சிகிச்சை அளிக்க அறிவுறுத்தியுள்ளேன்.
மாணவி செல்வி.சுஷ்மிதாஷென்னை இழந்து வாடும் பெற்றோருக்கும் அவரது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதல்களையும் தெரிவித்துக்கொள்வதோடு அவரது குடும்பத்தினருக்கு ஐந்து இலட்சம் ரூபாயும், படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் செல்வி.இராஜேஸ்வரிக்கு ஒரு இலட்சம் ரூபாயும் நிதியதவி வழங்கவும் உத்திரவிட்டுள்ளேன்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.