காங்கிரஸ் கட்சித் தலைவர் தேர்தலில் போட்டியிடவில்லை என ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் அறிவித்துள்ளார்.
கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்தது. இந்த தோல்விக்கு பொறுப்பேற்று கட்சியின் தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக ராகுல் காந்தி அறிவித்தார். இதையடுத்து, 2019ஆம் ஆண்டில் இருந்து தற்போது வரை காங்கிரஸ் கட்சியின் தற்காலிக தலைவராக சோனியா காந்தி இருந்து வருகிறார். இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் செப்.24 முதல் செப். 30ஆம் தேதி வரை நடைபெறும் எனவும், வேட்புமனுவை அக்டோபர் 8ஆம் தேதிக்குள் திரும்பப் பெற்றுக் கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தேர்தலில் ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட், கேரளாவைச் சேர்ந்த சசி தரூர் மற்றும் திக்விஜய் சிங் ஆகியோர் போட்டியிடுவதாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கு போட்டியிடப்போவதில்லை என ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் அறிவித்துள்ளார். சோனியா காந்தியை சந்தித்த பிறகு அசோக் கெலாட் இந்த தகவலை தெரிவித்துள்ளார். டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், ”நான் கொச்சியில் ராகுல் காந்தியை சந்தித்து, தேர்தலில் (காங்கிரஸ் தலைவர் பதவிக்கு) போட்டியிடுமாறு கேட்டுக் கொண்டேன். அவர் ஏற்காததால், நான் போட்டியிடுவேன் என்று கூறினேன். ஆனால் இப்போது தேர்தலில் போட்டியிடுவதில்லை என முடிவு செய்துள்ளேன்” என்று தெரிவித்தார். ராஜஸ்தான் முதலமைச்சராக நீங்கள் நீடிப்பீர்களா? என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அசோக் கெலாட், சோனியா காந்தி இது பற்றி முடிவு செய்வார் என்று கூறினார்.

இந்நிலையில், காங்கிரஸ் தலைவர் தேர்தலில் அசோக் கெலாட் போட்டியிடவில்லை என்பதால், மூத்தத் தலைவரும், மத்தியப்பிரதேச மாநில முன்னாள் முதலமைச்சருமான திக்விஜய் சிங் தேர்தலில் களமிறங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கேரளாவில் இருக்கும் திக்விஜய் சிங், சோனியா காந்தியை சந்தித்து பேசுவார் என்றும், இன்றோ அல்லது நாளையோ, வேட்புமனு தாக்கல் செய்வார் என்றும் கூறப்படுகிறது.