பெங்களூர் ரயில் நிலையத்தில் ட்ரம்முக்குள் அடைத்து வைக்கப்பட்ட பெண் சடலம் மீட்கப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. பெங்களூர் எஸ்.எம்.வி.டி ரயில் நிலையத்தில் மெயின் கேட் அருகே ட்ரம் ஒன்றிலிருந்து துர்நாற்றம் வருவதை தொடர்ந்து அதனை சோதித்துப் பார்த்தபோது அதில் பெண் ஒருவர் இறந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். இது தொடர்பாக பெங்களூர் ரயில்வே காவல் நிலைய அதிகாரிகள் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர் . இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள பெங்களூர் ரயில்வே காவல் அதிகாரி சௌம்யலதா இறந்த பெண்ணிற்கு 32 இல் இருந்து 35 வயதிற்குள் இருக்கலாம் என தெரிவித்துள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது.
கடந்த மூன்று மாதங்களில் பெண்கள் சடலமாக மீட்கப்படுவது இது மூன்றாவது முறையாகும். கடந்த வருடம் டிசம்பர் மாதம் அடையாளம் தெரியாத பெண் ஒருவரின் பிணம் அழுகிய நிலையில் பேசஞ்சர் ட்ரெயினில் இருந்து மீட்கப்பட்டது. ஜனவரி 4-ம் தேதி யஸ்வந்த்பூர் ரயில்வே ஸ்டேஷனில் அழுகிய நிலையில் 20 வயது மதிக்கத்தக்க பெண்ணின் சடலம் ட்ரம்முக்குள் இருந்து மீட்கப்பட்டது. தற்போது மூன்றாவது முறையாக பெங்களூர் ரயில் நிலையத்தில் பெண் சடலம் மீட்கப்பட்டிருக்கிறது. இந்த மூன்று சம்பவங்களுக்கும் ஏதேனும் தொடர்பு இருக்கிறதா என்பதை தெரிவிக்க காவல்துறை அதிகாரிகள் மறுத்துவிட்டனர். நான்கு மாதங்களில் பெங்களூர் ரயில் நிலையத்தில் மூன்று பெண்கள் சடலமாக அடைத்து வைக்கப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.