அருமனை அருகே உள்ள வட்டவிளையில் ஆட்டோ ஓட்டுனர்கள் சேர்ந்து பெண் ஒருவரை கட்டி வைத்து தாக்கிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தியிருக்கிறது. அருமனை அருகே உள்ள மேல்புறம் வட்டவிளையில் 35 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் வசித்து வருகிறார். அவரது கணவர் இறந்துவிட்ட நிலையில் இந்தப் பெண்மணி தனது தாயுடன் வசித்து வருகிறார். மேல்புறம் சந்திப்பு வழியாக அந்த பெண்மணி செல்லும் போதெல்லாம் அவரை கிண்டல் பேசுவதை வழக்கமாக வைத்திருக்கின்றனர் அப்பகுதியில் உள்ள சில ஆட்டோ ஓட்டுநர்கள். இதைப் போலவே நேற்று அந்தப் பெண்மணி மேல்புறம் சந்திப்பு வழியாக நடந்து சென்று கொண்டிருந்தபோது இந்த ஆட்டோ ஓட்டுநர்கள் அவரை கேலி செய்துள்ளனர்.
இதனால் ஆத்திரமடைந்த அவர் வீட்டிற்குச் சென்று கம்பு மற்றும் வெட்டுக்கத்தி போன்ற ஆயுதங்களுடன் வந்து அவர்களை தட்டி கேட்டிருக்கிறார். மேலும் அந்தப் பெண்மணி அவர்களை தாக்க முயன்றதாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த ஆட்டோ ஓட்டுநர்கள் அந்தப் பெண்மணியை அங்குள்ள மின்கம்பத்தில் கட்டி வைத்து தாக்கியுள்ளனர். இதனைக் கண்ட அப்பகுதியில் உள்ள இளைஞர்கள் இச்சம்பவத்தை தங்களது செல்போன் மூலம் வீடியோ எடுத்து காவல்துறைக்கு அனுப்பி உள்ளனர். இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் ஆட்டோ ஓட்டுநர்களிடமிருந்து அந்தப் பெண்ணை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக அந்தப் பெண்மணி அளித்த புகாரின் பேரில் சசி, வினோத் மற்றும் விஜயகாந்த் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். திபின் மற்றும் அரவிந்த ஆகியோர் தலைமறைவாக உள்ளனர் அவர்கள் இருவரையும் காவல்துறை தேடி வருகிறது.