உலகில் ஒற்றுமையையும், அமைதியையும் நிலைநாட்ட வேண்டியது அவசியம் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
டெல்லியில் உள்ள யஷோபூமியில் ஜி20 நாடுகளின் சபாநாயகர்கள் உச்சி மாநாட்டை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். பின்னர், அவர் பேசுகையில், ”ஜனநாயகத்தின் தாய் மற்றும் உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் பி20 உச்சி மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விவாதம் மற்றும் விரிவான வாதங்கள் செய்வதற்கான முக்கிய இடமாக உலகம் முழுவதும் உள்ள பார்லிமென்ட்கள் விளங்குகின்றன.
அனைத்து துறைகளிலும் பெண்கள் ஊக்குவிக்கப்படுகின்றனர். உலகில் ஒற்றுமையையும், அமைதியையும் நிலைநாட்ட வேண்டியது அவசியம். அமைதி மற்றும் சகோதரத்துவத்திற்காக ஒன்றாக இணைந்து முன்னேற வேண்டிய நேரம் இது. மோதல்கள் நிறைந்த உலகம் யாருக்கும் பயனளிக்காது. பிளவுபட்ட உலகம் சவாலுக்கு தீர்வைக் கொடுக்காது. ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம் என்ற உணர்வில் உலகைப் பார்க்க வேண்டும்.
பூமிக்கும், மனித நேயத்திற்கும் பயங்கரவாதம் எவ்வளவு பெரிய சவால் என்பதை உலகம் உணர்ந்து கொண்டுள்ளது. பயங்கரவாதத்திற்கு எதிராக, எவ்வாறு ஒருங்கிணைந்து போராடுவது என்பது குறித்து உலகில் உள்ள பார்லிமென்ட் மற்றும் அதன் உறுப்பினர்கள் சிந்திக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.