மத்தியப்பிரதேச மாநிலம் இந்தூர் நகரில் சன்வர் சாலை பகுதியைச் சேர்ந்தவர் கபில் சாகு (23). இவருக்கும் நிஷா என்பவருக்கும் திருமணம் செய்வது என நிச்சயிக்கப்பட்டு இருந்த நிலையில், கபில் தனது பெற்றோரிடம் விஜய் நகர் பகுதிக்கு செல்கிறேன் எனக்கூறிவிட்டு காலை நேரத்தில் சென்று உள்ளார். ஆனால், மதியம் ஆகியும் வீடு திரும்பவில்லை. இதனால், கபிலின் தந்தை அவரிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அப்போது, கபில் விஷம் குடித்த தகவலை, அவருடன் இருந்த நிஷா தெரிவித்துள்ளார். அவரும் விஷம் குடித்திருக்கிறார். தங்களை காப்பாற்றும்படியும் அவர் கோரியுள்ளார். அவர்கள் இருவரும் ஓட்டலில் தங்கி இருந்துள்ளனர். ஆனால், எந்த ஓட்டல் என தெரியாமல் கபிலின் உறவினர்கள் பல இடங்களில் தேடி கடைசியில் சம்பவ இடத்திற்கு சென்றுள்ளனர்.
ஓட்டல் பணியாளர்கள் உதவியுடன் மாற்று சாவி அறையை உடைத்து உள்ளே சென்ற போது, கபில், நிஷா இருவரும் சுயநினைவற்று கிடந்தனர். அவர்களை உடனே மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், சிகிச்சை பலனின்றி அவர்கள் உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் கூறி உள்ளனர். பொதுவாக, திருமணம் செய்வதற்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவிக்கும் போது இது போன்ற தற்கொலை முடிவை காதல் ஜோடிகள் எடுப்பது வழக்கம். ஆனால், திருமண நிச்சயம் செய்த ஜோடி ஓட்டலில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அங்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.