சேலம் மாவட்டம் அயோத்திபட்டணம் அடுத்த வெள்ளியம்பட்டியைச் சேர்ந்தவர் பிரகாஷ் ராஜ் (22). இவர் அதே பகுதியைச் சேர்ந்த உறவினர் பெண்ணை காதலித்து வந்துள்ளார். இதையடுத்து, இவர்கள் இருவரும் கடந்த 2022 மே மாதம் இருவீட்டார் சம்மதத்துடன் திருமணமும் செய்து கொண்டுள்ளனர். ஆனால், பிரகாஷ் திருமணம் செய்துகொண்ட பெண்ணிற்கு வயது 15 தான் என்று கூறப்படுகிறது. இருப்பினும், இருவீட்டாரும் ஏற்கனவே உறவினர்கள் என்பதால் இந்த திருமணத்தை நடத்தி வைத்துள்ளனர். இதனைத் தொடர்ந்து கர்ப்பமான சிறுமியை சேலம் அரசு மருத்துவமனையில் பிரகாஷ் ராஜ் சேர்த்துள்ளார். அப்போது, சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள் சந்தேகமடைந்து அவரது பிறப்பு சான்றிதழ் உள்ளிட்ட ஆவணங்களை சரிபார்த்துள்ளனர். அப்போது, கர்ப்பமடைந்த பெண்ணுக்கு வயது வெறும் 15 தான் என்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இது தொடர்பாக காவல்துறையினரிடம் மருத்துவர்கள் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் பிரகாஷ் ராஜ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். தன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதை அறிந்த பிரகாஷ் ராஜ் உடனடியாக தலைவமறைவானார். இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் அவரை வலைவீசி தேடி வருகின்றனர்.