சென்னை, அயனாவரம் வசந்தா கார்டன் பகுதியில் குடியிருக்கும் இளம் பெண் (23). இவர் காவல்துறையில் காவலராக வேலை செய்து வருகிறார். இந்நிலையில், நேற்று காலை தனது வீட்டில் இருக்கும் பாத்ரூமில் குளித்துள்ளார்.
அப்போது பாத்ரூமின் பக்கவாட்டு ஜன்னல் வழியாக ஒருவர் எட்டிப் பார்ப்பது அவருக்கு தெரிந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண், உடனடியாக ஆடைகளை உடுத்திக் கொண்டு வெளியே வந்து பார்த்தபோது, குளியலறையை எட்டிப் பார்த்தது பக்கத்து வீட்டில் இருக்கும் வேன் ஓட்டுநர் வசந்த் (26) என்று தெரிந்தது.
இதனைத் தொடர்ந்து அவரை மடக்கி பிடித்த அந்த பெண், அவரது கையில் இருந்த செல்ஃபோனை வாங்கி சோதனையிட்டதில், தான் குளிப்பதை செல்ஃபோனில் வீடியோ எடுத்தது தெரியவந்தது. இதனையடுத்து செல்போனை பறிமுதல் செய்த பெண் காவலர், அவரை அயனாவரம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். வசந்தை கைது செய்த காவல்துறையினர், விசாரணை நடத்தி வருகின்றனர்.