திருமணத்திற்கு மறுத்த காதலியை அவரது தாய் கண்முன்னே வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிர மாநிலம் புனே சித்தார்த் நகரில் வசித்து வந்தவர் ஸ்வேதா (26). ஸ்வேதாவின் உறவுக்கார பையன் பிரதீக் கிசான். இவர் பொறியியல் படிப்பு முடித்து, தண்ணீர் கேன் கம்பெனி நடத்தி வந்துள்ளார். ஸ்வேதா-பிரதீக் கிசான் இருவரும் வீட்டுக்கு தெரியாமல் தங்களது காதலை வளர்த்து வந்துள்ளனர். ஒரு கட்டத்தில் வீட்டில் தங்களது காதலை சொல்லியபோது, உறவு முறை என்பதால், இரு வீட்டாரும் திருமணத்திற்கு சம்மதித்தனர். உடனே திருமணம் செய்து கொள்ளலாம் என்று பிரதீக் தெரிவித்துள்ளார். ஆனால், கடந்த ஆகஸ்ட் மாதம் தான் லண்டனில் சி.ஏ. படிப்பு முடித்து இந்தியா திரும்பி இருந்தார் ஸ்வேதா. அதனால், நல்ல நிறுவனத்தில் வேலை என கொஞ்சம் செட்டிலாகி விட்டு பிறகு திருமணம் செய்து கொள்ளலாம் என்று கால அவகாசம் கேட்டுள்ளார் ஸ்வேதா.

பிறகு, சந்திக்கும் போதெல்லாம் திருமணம் செய்து கொள்வது குறித்து பேச்சு எழுந்து, இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு சண்டை வந்துள்ளது. ஒரு கட்டத்தில் பிரதீக் தொடர்ந்து திருமணம் செய்து கொள்ள வற்புறுத்துவதை அடுத்து, பிரதீக்கை வெறுக்க ஆரம்பித்து, திருமணம் செய்து கொள்ள முடியாது என்று ஸ்வேதா கூறியுள்ளார். அதன் பின்னர், பிரதீக் ஸ்வேதாவுக்குத் தொடர்ந்து தொல்லை கொடுக்க ஆரம்பித்துள்ளார். பின்னர், கடிதம் எழுதி வைத்து விட்டு, தற்கொலை செய்து கொள்ள போவதாகவும் ஸ்வேதாவை மிரட்டியிருக்கிறார். ஆனாலும் திருமணத்துக்கு ஸ்வேதா சம்மதிக்கவில்லை.

இந்நிலையில் ஸ்வேதா, தனது தாயாருடன் இருசக்கர வாகனத்தில் வெளியே சென்று விட்டு, மதிய நேரத்தில் அவரது வீட்டுக்குத் திரும்பினார். முன்கூட்டியே ஸ்வேதா வீட்டின் வாகனங்கள் நிறுத்துமிடத்தில் காத்திருந்த பிரதீக், ஸ்வேதாவுடன் மீண்டும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். தொடர்ந்து ஸ்வேதா சண்டையிடவும், ஸ்வேதாவின் தாய் கண்முன்னே தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் ஸ்வேதாவின் கழுத்து, மார்பு மற்றும் வயிறு என சரமாரியாக அடுத்தடுத்து குத்திவிட்டு, அங்கிருந்து தப்பி ஓடினார். இதையடுத்து ஸ்வேதா குடும்பத்தினர் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

ஸ்வேதாவை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் வரும் வழியிலேயே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து ஸ்வேதா குடும்பத்தார் கூறுகையில், ஸ்வேதா சிஏ படிப்பை முடித்துவிட்டு, மேல் படிப்புக்காக வெளிநாடு செல்ல விரும்பினார். இதற்கு தடையாக இருந்த திருமணத்தை வெறுத்தார். இந்த மறுப்பால் தொல்லை கொடுத்து வந்த பிரதீக் மீதும் போலீசாரிடம் புகார் அளித்தார். ஆனால், நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இப்போது கொலை செய்யப்பட்டார். இந்த கொலைக்கு காவல்துறை அதிகாரிகளின் அலட்சியப் போக்கே காரணம். முன்கூட்டியே பிரதீக் மீது நடவடிக்கை எடுத்திருந்தால் ஸ்வேதா உயிருடன் இருந்திருப்பார் என்று தெரிவித்தனர். திருமணம் செய்ய மறுத்த இளம்பெண் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.