இந்திய திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நிறுவனத்தின் (FTII) தலைவராக நடிகர் மாதவன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இந்திய திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி நிறுவனம் (FTII) சங்கத்தின் தலைவராகவும், ஆளும் குழுவின் தலைவராகவும் நடிகர் மாதவனை வெள்ளிக்கிழமை தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் நியமித்தது. முன்னாள் தலைவர் இயக்குனர் சேகர் கபூரின் பதவிக்காலம் மார்ச் 3, 2023 அன்று முடிவடைந்த நிலையில் தற்போது நடிகர் மாதவன் நியமனம் செய்யப்பட்டுள்ளது பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நியமனம் குறித்து பேசிய இந்திய திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நிறுவனத்தின் பதிவாளர் சயீத் ரபீஹாஷ்மி ; மாதவன் FTII சொசைட்டியின் தலைவராகவும், ஆளும் குழுவின் தலைவராகவும் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த முடிவு மத்திய அமைச்சகத்தால் எங்களுக்கு முறையாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது கூறினார்.
FTII தலைவர் தலைமையிலான FTII சொசைட்டியில் 12 பேர் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர், அவர்களில் எட்டு பேர் ‘பெர்சன்ஸ் ஆஃப் எமினன்ஸ்’ பிரிவின் கீழ் பரிந்துரை செய்யப்பட்டுள்ளனர், நான்கு பேர் FTII முன்னாள் மாணவர்கள். நிறுவனத்தின் தலைவரை நியமிக்கும் போது அமைச்சகம் வழக்கமாக உறுப்பினர்களை பரிந்துரைக்கிறது, ஆனால் 2017 அக்டோபரில் அனுபம் கெர் நியமிக்கப்பட்டபோது அது இந்த மரபிலிருந்து விலகியிருந்தது. மற்ற பரிந்துரைக்கப்பட்ட உறுப்பினர்கள் நியமிக்கப்படாததால் மாதவனின் நியமனத்திலும் அமைச்சகம் அதையே செய்ததாகக் சொல்லப்படுகிறது.