தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் விஜய். இவர், தற்போது வம்சி இயக்கத்தில், தில் ராஜு தயாரிப்பில் ’வாரிசு’ திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வரும் 11ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இந்நிலையில், நடிகர் விஜய் சினிமாவை தாண்டி அரசியலுக்கும் வர வேண்டும் என ரசிகர்கள் விரும்புகின்றனர். இதன் காரணமாக நடிகர் விஜயின் படங்கள் ரிலீஸ் ஆகும்போது ஒவ்வொரு முறையும் வருங்கால முதல்வரே என்று விஜயை பலவிதமாக புகழ்ந்து ரசிகர்கள் போஸ்டர் அடித்து ஒட்டுவார்கள். அந்த வகையில், தற்போதும் விஜய் ரசிகர்கள் போஸ்டர் அடித்து ஒட்டியது கவனம் ஈர்த்துள்ளது.

அதாவது நடிகர் விஜய்யை எம்ஜிஆர் போன்று சித்தரித்து முதலமைச்சர் நாற்காலியில் உட்காரும் வருங்கால முதல்வரே என்று குறிப்பிட்டுள்ளனர். அதோடு 2026ஆம் ஆண்டு ஜார்ஜ் கோட்டையில் அமரப்போகும் நற்பணி நாயகரே எஸ்ஏசியின் வாரிசே என்றும் போஸ்டரில் வாசகங்கள் இடம்பெற்றுள்ளன. இந்த போஸ்டரில் கலைஞர் கருணாநிதி, அண்ணா, எம்ஜிஆர், கருணாநிதி, ஜெயலலிதா, முதல்வர் முக.ஸ்டாலின் ஆகியோரின் புகைப்படங்கள் இடம் பெற்றுள்ளது. இதனால், நடிகர் விஜய் 2026ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் திராவிட கட்சிகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுவாரா? என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. மேலும், முதல்வர் முக.ஸ்டாலினின் படமும் போஸ்டரில் ஒட்டப்பட்டுள்ளதால் திமுக கட்சியுடன் கூட்டணி வைப்பாரா? என்ற எதிர்பார்ப்பும் நிலவுகிறது.