நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடர் கடந்த 18ஆம் தேதி தொடங்கி வரும் 22ஆம் தேதி வரை மொத்தம் 5 நாட்களுக்கு நடைபெறவுள்ளது. இந்த சிறப்புக் கூட்டத் தொடரின் முதல் நாள் நிகழ்வு வழக்கம்போல் பழைய நாடாளுமன்றக் கட்டடத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத் தொடரின் இரண்டாவது நாள் நிகழ்வுகள் புதிய நாடாளுமன்றக் கட்டடத்தில் நடைபெற்றது. அதில் முதல் மசோதாவாக, நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டமன்றங்களில் மகளிருக்கு 33% இட ஒதுக்கீடு வழங்கும் மசோதா மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது.
இந்நிலையில், புதிய நாடாளுமன்ற கட்டிடத்திற்குச் சிறப்பு அழைப்பாளர்களாக பாலிவுட் நடிகைகள் கங்கனா ரனாவத், ஈஷா குப்தா உள்ளிட்ட பிரபலங்கள் அழைக்கப்பட்டனர். அழைப்பை ஏற்று வருகை தந்த அவர்களுக்கு அமைச்சர் அனுராக் தாக்கூர் இனிப்பு வழங்கினார். இதனைத் தொடர்ந்து இன்று சிறப்பு அழைப்பாளர்களாக நடிகைகள் தமன்னா, திவ்யா தத்தா உள்ளிட்ட நடிகைகள் புதிய நாடாளுமன்றத்திற்கு வருகை தந்திருந்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நடிகை தமன்னா, “மகளிருக்கான இட ஒதுக்கீடு வழங்கும் மசோதா சாமானிய மக்களை அரசியலில் ஈடுபட ஊக்குவிக்கும்” எனத் தெரிவித்தார். புதிய நாடாளுமன்றத்திற்கு இன்று வரை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அழைக்கப்படவில்லை என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வரும் நிலையில், மத்திய அரசின் அழைப்பின் பேரில் புதிய நாடாளுமன்றத்திற்கு இன்றும் நடிகைகள் வருகை தந்தது சமூக வலைதளங்களில் விமர்சனங்களுக்கு உள்ளாகி வருகிறது.