ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஆதித்யா எல்1 என்ற விண்கலம், சூரியனை ஆய்வு செய்யவதற்காக கடந்த ஆண்டு செப்டம்பர் 2ஆம் தேதி விண்ணில் ஏவப்பட்டது. இந்த விண்கலம் பிஎஸ்எல்வி 57 ராக்கெட் மூலம் இஸ்ரோவால் விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டது. இந்த விண்கலத்தை நிலைநாட்டுவதன் மூலம், சூரிய புயல்கள் ஏற்படும் போது முன்கூட்டியே எச்சரிக்கை கொடுக்க முடியும். மேலும், விண்வெளி பருவநிலை மாற்றத்தை நாம் முன்னதாகவே அறிய முடியும். அதோடு, பூமியை சுற்றியுள்ள செயற்கை கோள்களுக்கு எதிர்காலத்தில் ஏதேனும் பாதிப்புகள் ஏற்படுமா என்பதை இந்த ஆய்வின் வாயிலாக தெரிந்து கொள்ள முடியும்.
இந்நிலையில், ஆதித்யா எல்1 விண்கலம், அதன் இலக்கான ‘லெக்ராஞ்சியன் பாயிண்ட் ஒன்’ என்ற பகுதியை இன்று (ஜனவரி 6) எட்டியுள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது. உலகளவில் அமெரிக்காவுக்கு அடுத்தப்படியாக 2-வது நாடாக இந்தியா இந்த வரலாற்று சாதனையை படைத்துள்ளது. இந்நிலையில், பிரதமர் மோடி தனது ட்விட்டர் (எக்ஸ்) பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ”இந்தியா மற்றொரு சாதனையை படைத்துள்ளது. சூரியனை ஆய்வு செய்ய அனுப்பட்ட ஆதித்யா எல்1 விண்கலம் வெற்றிகரமாக அதன் இலக்கை அடைந்துள்ளது. மிகவும் கடினமான இந்த விண்வெளி பயணம் நமது விஞ்ஞானிகளின் இடைவிடாத அர்ப்பணிப்புக்கு ஒரு சான்றாகும். இந்த சாதனையை நாட்டு மக்களுடன் இணைந்து நானும் பாராட்டுகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.