அரியலூர் மாவட்டம் கீழப்பழுவூர் அருகே கருவேப்பிலை கட்டளை ஊரைச் சேர்ந்தவர் அர்ஜுனன் (48). இவரது மனைவி இறந்துவிட்ட நிலையில், தனது 2 மகன்கள், 3 மகள்களுடன் வசித்து வருகிறார். இதில் யாருக்கும் இன்னும் திருமணமாகவில்லை. இந்நிலையில், அர்ஜுனனின் இளைய மகன் அருண் (24) திருப்பூர் பின்னலாடை நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். அங்கு தன்னுடன் வேலை செய்யும் பெண்ணை காதலித்தும் வந்துள்ளார். தங்களது காதல் விவகாரத்தை அருண் தனது தந்தையிடம் சொல்லியிருக்கிறார். ஆனால், அதற்கு அவர் மறுத்து விட்டார்.

இந்நிலையில் அருண், தனது தந்தையின் எதிர்ப்பை மீறி தனது காதலியை திருமணம் செய்துகொண்டு வீட்டிற்கு வந்துள்ளார். இதனைப் பார்த்து கோபம் அடைந்த அர்ஜுனன், ‘உன் கூட பிறந்த அக்கா, அண்ணன் என யாருக்கும் இன்னும் திருமணம் ஆகவில்லை. இந்த சமயத்தில் நீ திருமணம் செய்து கொண்டது சரியா? இதனால் அக்காவுக்கு மாப்பிள்ளை, அண்ணனுக்கு பெண் கொடுப்பதற்கு பலரும் தயங்குவார்கள். அவர்கள் திருமணம் முடிந்த பிறகு நீ திருமணம் செய்து இருக்கலாமே’ என்று கண்டித்துள்ளார். இதனால் தந்தை-மகன் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், சம்பவத்தன்று இரவு மது போதையில் வந்த அர்ஜுனன், மகனிடம் மீண்டும் தகராறு செய்துள்ளார். இதில், ஒருகட்டத்தில் கோபம் அடைந்த அருண், கத்தியால் தந்தையை சரமாரியாக குத்தியுள்ளார். இதில், அர்ஜூனன் ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்து, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த சம்பவம் பற்றி தகவல் அறிந்த கீழப்பழுவூர் போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அர்ஜுனனின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அரியலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், தந்தையை கொலை செய்த மகன் அருணை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.