ஆத்தூரில், டோக்கன் கொடுத்து விட்டு இலவச வேட்டி,சேலை வழங்காமல் எஸ்கேப்பான, பாஜக நிர்வாகிகளை, பெண்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. சேலம் மாவட்டம் ஆத்தூரில், பாஜக சார்பில் ஏழைகளுக்கு நல உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி, பழைய பஸ் நிலையம் மணிக்கூண்டு அருகில் நேற்று நடந்தது. இதில் சேலம் கிழக்கு மாவட்ட தலைவர் சண்முகநாதன், மாநில பட்டியலின பிரிவு துணைத்தலைவர் அறிவழகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
ஏழைகளுக்கு இலவச வேட்டி, சேலை வழங்குவதாக சொல்லி, பாஜக கட்சியின் சின்னம் பொறிக்கப்பட்ட டோக்கன்கள் வழங்கப்பட்டன. இந்நிலையில், நிர்வாகிகள் பேசி முடித்தவுடன், பெயரளவிற்கு 10 பேருக்கு வேட்டி, சேலைகள் கொடுத்துவிட்டு, நிர்வாகிகள் மேடையை விட்டு இறங்கி, காரில் ஏறிச்செல்ல முயன்றனர். ஆனால், டோக்கன் வாங்கிய 100-க்கும் மேற்பட்ட பெண்கள், வேட்டி, சேலை கிடைக்காத அதிர்ச்சியில் நிர்வாகிகளை சூழ்ந்து கொண்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதனால், ஆத்திரமடைந்த பாஜக நிர்வாகிகள், பாதுகாப்பிற்கு இருந்த காவல்துறையினரை அழைத்து டோக்கன்களுடன் இலவச வேட்டி, சேலை கேட்டு முற்றுகையிட்டவர்களை அப்புறப்படுத்தும்படி கூறினர். அதன்படி காவல்துறையினர் அங்கிருந்தவர்களை அப்புறப்படுத்தினர். இதை தொடர்ந்து, பாஜக நிர்வாகிகள் அங்கிருந்து தப்பி ஓடினர்.