அதிமுக 2ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் இன்று வெளியாக உள்ளது. கூட்டணி கட்சிகளுக்கு போக மீதமுள்ள 33 தொகுதிகளில் அதிமுக நேரடியாக போட்டியிடுவதாக தெரிகிறது. நேற்று முதற்கட்டமாக 16 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை அதிமுக வெளியிட்டு இருந்தது.
தமிழகத்தில் லோக்சபா தேர்தல் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. வேட்பு மனு தாக்கல் நேற்றுடன் துவங்கியுள்ளதால், அரசியல் கட்சிகள் வேட்பாளரை அறிவிப்பதில் தீவிரம் காட்டி வருகின்றன. திமுக கூட்டணியில் காங்கிரஸ் மட்டுமே வேட்பாளரை அறிவிக்கவில்லை. தமிழகத்தில் பிரதான எதிர்க்கட்சியான அதிமுக நேற்று முதல் கட்டமாக 16 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது.
அதிமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. தேமுதிகவுக்கு திருவள்ளூர் (தனி), மத்திய சென்னை, கடலூர், தஞ்சை, விருதுநகர் ஆகிய 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. எஸ்டிபிஐ கட்சிக்கு திண்டுக்கல் தொகுதியும், புதிய தமிழகம் கட்சிக்கு தென்காசி (தனி) தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளன. கிட்டத்தட்ட அதிமுகவில் கூட்டணி முடிவு செய்யப்பட்டுவிட்ட நிலையில், அதிமுக 33 தொகுதிகளில் போட்டியிடும் என்று தெரிகிறது.
அக்கட்சியின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியலில் 16 வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். அந்த வகையில் அதிமுக கூட்டணியை பொறுத்தவரை இதுவரை 23 தொகுதிகள் அறிவிக்கப்பட்டு விட்டன. புதுச்சேரி சேர்த்து மீதமுள்ள 17 தொகுதிகளில் அ.தி.மு.க. போட்டியிடுமா? அல்லது கூட்டணி கட்சிகளுக்கு ஏதாவது ஒதுக்கப்படுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. அதிமுக கூட்டணியை பொறுத்தவரை சிறிய கட்சிகளே பெரியளவில் அக்கட்சிக்கு ஆதரவு தந்துள்ளன. எனவே, சிறிய கட்சிகளுக்கு அதிமுக தொகுதிகளை விட்டுத்தரும் வாய்ப்பு குறைவு என்று சொல்லப்படுகிறது.
இதன் காரணமாக இதர 17 தொகுதிகளில் அதிமுகவே போட்டியிட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. மீதமுள்ள தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை இன்று அதிமுக வெளியிடுகிறது. அதேபோல் அதிமுக தேர்தல் அறிக்கையும் இன்று வெளியிடப்படலாம் என சொல்லப்படுகிறது. திமுக நேற்று கூட்டணி கட்சிகளுக்கு போக மீதமுள்ள 21 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது. இதேபோல் திமுக தேர்தல் அறிக்கையையும் வெளியிட்டது. தமிழக காங்கிரசும் இன்று வேட்பாளர் பட்டியலை வெளியிட இருக்கிறது.
Read More : முடிவில் திடீர் மாற்றம்..!! BJP கூட்டணியில் நீடிப்பாரா ஓபிஎஸ்..? வெளியான பரபரப்பு தகவல்..!!