அதிமுக பொதுக்குழு விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் ஓ.பன்னீர்செல்வம் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளார்.
கடந்த ஜூலை 11ஆம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு செல்லாது என்று சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதி தீர்ப்பு அளித்தார். இதை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்குகளை இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு கடந்த 2ஆம் தேதி விசாரித்தது. அப்போது, அதிமுக பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்து வழக்கு தொடராத நிலையில், அதற்கு முந்தைய நிலையே நீடிக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்க முடியாது. இருவரும் இணைந்து தான் கூட்டங்களை கூட்ட வேண்டும் என்ற உத்தரவு நடைமுறைக்கு சாத்தியமில்லாதது எனக் கூறி தனி நீதிபதி வழங்கிய தீர்ப்பு ரத்து செய்யப்படுகிறது என்று தெரிவித்தனர்.

இந்த தீர்ப்புக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் இன்று உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. முன்னதாக, எடப்பாடி பழனிசாமி தரப்பில் உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனுக்களை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் ‘இந்த வழக்கில் மேல்முறையீடு மனுக்கள் தாக்கல் செய்யும்போது, தங்களது தரப்பு கருத்தை கேட்காமல் உத்தரவு பிறப்பிக்கக் கூடாது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.