அதிமுக ஒன்றிய கவுன்சிலர் மற்றும் அவரது மகன் ஆகியோர் கடத்தப்பட்டதாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியை அடுத்த பல்லவாடா கிராமத்தை சேர்ந்தவர் அதிமுக பிரமுகர் ரமேஷ். இவருக்கு ரோஜா என்ற மனைவியும், ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர். இவரது மனைவி ரோஜா, கும்மிடிப்பூண்டி ஊராட்சி ஒன்றியத்தின் 1வது வார்டு கவுன்சிலராக பதவி வகித்து வருகிறார். இவர்களது மகன் ஜேக்கப் கல்லூரியில் படித்து வருகிறார். இந்நிலையில், நேற்று மாலை இவர்களது வீட்டிற்கு உறவினர்கள் சிலர் சென்றபோது, வீட்டில் இருந்த சிசிடிவி கேமராக்கள் உடைக்கப்பட்டும், பெண் கவுன்சிலர் மற்றும் அவரது மகன் மாயமானது கண்டு அதிர்ச்சி அடைந்து ரமேஷுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து, பெண் கவுன்சிலர் ரோஜா ரமேஷ், மகன் ஜேக்கப் இருவரையும் மர்ம கும்பல் வீட்டுக்குள் புகுந்து அவர்களது காரிலேயே கடத்திச் சென்றதாக போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
இதனையடுத்து, காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை நடத்தினர். அப்போது, சிசிடிவி கேமரா இணைப்புகள் துண்டிக்கப்பட்டு ஹார்டு டிஸ்க்குகளை மர்ம நபர்கள் எடுத்து சென்றுள்ளது தெரியவந்தது. வீட்டில் இருந்து கடத்தப்பட்ட பெண் கவுன்சிலரின் செல்போன் எண் ஆந்திராவில் அணைக்கப்பட்டதும் விசாரணையில் தெரியவந்தது. பெண் கவுன்சிலர் கடத்தப்பட்ட புகார் தொடர்பாக 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், ஆந்திராவிற்கு தனிப்படை விரைந்துள்ளதாகவும் காவல்துறை தரப்பு தெரிவித்துள்ளது. இந்த கடத்தல் சம்பவம் தொடர்பாக பாதிரிவேடு காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஒப்பந்த பணிகள் மேற்கொள்வதில் ஏற்பட்ட தொழில் போட்டி காரணமா அல்லது அரசியல் காழ்ப்புணர்ச்சி, உட்கட்சி பூசல் ஏதேனும் காரணமா என காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். வீட்டில் இருந்த பெண் கவுன்சிலர், மகனுடன் காரில் கடத்தப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது