மொபைல் போன் வாங்கவே காசு இல்லை என்ற நிலைமை எல்லாம் மாறிவிட்டது. தற்போது குழந்தை முதல் பெரியவர் வரை அனைவரிடமுமே மொபைல் போன் உள்ளது. குறைந்த விலையில் பல்வேறு அம்சங்களுடன் ஸ்மார்ட்போன்கள் கிடைப்பதால் அவற்றை எளிதாக வாங்கி விடுகின்றனர். அதேபோல, ஈஎம்ஐ போன்ற வசதியின் கீழ் ஸ்மார்ட்போன் வாங்கமுடிவதால், ஒரு சராசரியான பொருளாக ஸ்மார்ட்போன் மாறிவிட்டது. வெறும் தகவல் தொடர்பு சாதனமாக மட்டுமல்லாமல், பல்வேறு மொபைல் செயலிகள், கேம்கள் என நம்மை ஸ்மார்ட்போனிலேயே கட்டிப் போட்டு வைத்துள்ளன. இதுபோன்ற காரணங்களால் இந்தியாவில் ஸ்மார்ட்போன்களின் பயன்பாடு அசுரவேகத்தில் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், பல ஸ்டார்ட்போன் பயனர்களுக்கு ‘தீவிர அவசரகால எச்சரிக்கை’ என்ற தலைப்புடன் ஃபிளாஷ் மெசேஜ் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது. இது நாட்டின் அவசரகால எச்சரிக்கை அமைப்பை சோதிக்கும் வகையில் அனுப்பப்பட்டதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இது இந்திய அரசின் தொலைத்தொடர்புத் துறையின் செல் பிராட்காஸ்டிங் அமைப்பு மூலம் அனுப்பப்பட்ட மாதிரி எச்சரிக்கை செய்தி ஆகும். இந்தச் செய்தியைப் பார்த்தவர்கள் அதனைப் புறக்கணித்துவிடலாம்.
தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம், இந்த செய்தியை நாடு முழுவதும் உள்ள ஸ்மார்ட்போன் பயனர்களுக்கு அனுப்பியுள்ளது. இது பொது பாதுகாப்பை மேம்படுத்துவதையும், அவசர காலங்களில் சரியான நேரத்தில் எச்சரிக்கைகளை வழங்குவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது என்று அந்த மெசேஜில் குறிப்பிடப்பட்டுள்ளது. மொபைல் ஆபரேட்டர்கள் மற்றும் செல் பிராட்காஸ்டிங் அமைப்புகளின் அவசர எச்சரிக்கை அனுப்பும் செயல்திறனை மதிப்பிடுவதற்கு இதுபோன்ற சோதனைகள் வெவ்வேறு பிராந்தியங்களில் அவ்வப்போது மேற்கொள்ளப்படும்.
நிலநடுக்கம், சுனாமி மற்றும் வெள்ளம் போன்ற பேரிடர்களுக்கு தயாராக இருக்க தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்துடன் இணைந்து மத்திய அரசு செயல்பட்டு வருகிறது. இதற்கு முன்னதாக ஜூலை 20ஆம் தேதி இதேபோன்ற சோதனை எச்சரிக்கையைச் செய்தி அனுப்பப்பட்டது குறிப்பிடத்தக்கது.