தமிழ்நாட்டில் தற்போது 1,545 அரசுப் பள்ளிகளில் காலை உணவு வழங்கப்படுகிறது. இதன்மூலம், ஒரு லட்சத்து 14 ஆயிரம் மாணவ, மாணவியர் பயன்பெற்று வருகின்றனர். இத்திட்டத்தின் மூலம் மாணவர்களின் வருகை அதிகரித்ததால், இது மாநிலம் முழுவதும் விரிவுபடுத்தப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. இதற்காக ரூ.500 கோடி ஒதுக்கீடு செய்து, வரும் கல்வி ஆண்டு முதல் அனைத்து அரசுப் பள்ளிகளிலும் காலை சிற்றுண்டி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
இதன் மூலமாக ஒன்று முதல் 5ஆம் வகுப்பு வரையிலான 18 லட்சம் மாணவர்கள் பயனடைவர் எனவும் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், கோடை விடுமுறை முடிந்து ஜூன் 7ஆம் தேதி முதல் மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும் நிலையில், அனைத்துப் பள்ளிகளிலும் காலை சிற்றுண்டி வழங்க சாத்தியம் இல்லை என கூறப்படுகிறது. எனவே, மாணவர் சேர்க்கை முடிந்த பின்னர் கணக்கெடுப்பு நடத்தி, ஒப்பந்தம் வழங்குவதற்காக ஒரு மாத காலம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. எனினும், ஜூலை மாதத்தில் அனைத்துப் பள்ளிகளிலும் காலை சிற்றுண்டி வழங்க வாய்ப்பு உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.