பாகிஸ்தான் நாட்டிலுள்ள பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள ஒரு சந்தையில் இன்று ஏற்பட்ட குண்டு வெடிப்பில் நான்கு பேர் பலியாகினர் 10 பேர் காயமடைந்துள்ளனர். பாகிஸ்தான் நாட்டின் பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள ருக்னி பஜார் என்ற ஆள் நடமாட்டம் மிகுந்த நெரிசலான சந்தையில் இன்று சக்தி வாய்ந்த குண்டு வெடித்தது. இச்சம்பவத்தில் நான்கு பேர் உடல் சிதறி பலியாகினர் பத்துக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இது தொடர்பாக அண்ணாட்டு காவல்துறையினர் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர்.
இது தொடர்பான முதல் கட்ட அறிக்கையில் கூட்ட நெரிசல் மிகுந்த ருக்னி மார்க்கெட் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த ஒரு மோட்டார் சைக்கிளில் வெடிகுண்டு பொருத்தப்பட்டிருக்கிறது. மேலும் இந்த வெடிகுண்டு ரிமோட் கண்ட்ரோலின் உதவியுடன் வெடிக்கச் செய்யப்பட்டிருப்பதாக அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பான அறிக்கையை விரைவாக சமர்ப்பிக்கும் படி பாகிஸ்தான் பிரதமர் பலுசிஸ்தான் முதலமைச்சருக்கு உத்தரவு பிறப்பித்திருக்கிறார். இதுவரை எந்த ஒரு தீவிரவாத இயக்கமும் இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்கவில்லை. சில காலமாக அமைதியாக இருந்த பாகிஸ்தானில் தற்போது குண்டுவெடிப்பு சம்பவங்கள் மீண்டும் தலை தூக்கி இருப்பது அங்குள்ள மக்களை அச்சமடைய செய்திருக்கிறது.